India

”கர்நாடகாவை வெறுக்கும் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா” : முதலமைச்சர் சித்தராமையா குற்றச்சாட்டு!

கர்நாடக மாநிலத்தில் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ரூ.18172 கோடி வழங்காத ஒன்றிய அரசை கண்டித்து பெங்களூருவில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் சித்தராமையா, " 4 நாட்கள் மாநிலத்தில் வறட்சி நிலவரம் குறித்து ஆய்வு செய்து அதன் அறிக்கையை ஒன்றிய அமைச்சரிடம் அமைச்சர்கள் கிருஷண பைரே, பிரியங்க் கார்கே ஆகியோர் நேரில் அளித்துள்ளனர்.

மாநிலத்தில் கடும் வரட்சி நிலவுகிறது. 240 தாலுகாக்களில் 223 தாலுக்காக்களை வறட்சி பாதித்ததாக அறிவித்துள்ளோம். 100 ஆண்டுகளுக்குப் பிறகு மாநிலத்தில் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. வறட்சியால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

வறட்சி காரணமாக 48000 ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். 34 லட்சம் விவசாயிகளுக்கு 2000 ரூபாய் வழங்க மாநில அரசு ரூ. 650 கோடி ஒதுக்கியுள்ளது.

இதனால் தேசிய பேரிடர் நிதியாக .ரூ.18172 கோடியை வழங்க வேண்டும் என ஒன்றிய அரசிடம் கடந்த 7 மாதங்களாக வலியுறுத்தப்படுகிறது. ஆனால் இதுவரை ஒன்றிய அரசு ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை.

தற்போது தேர்தல் நேரம் என்பதால் பிரதமர் மோடியும் அமித்ஷாவும் அடிக்க கர்நாடகா மாநிலத்திற்கு வருகிறார்கள். இவர்கள் எந்த முகத்தை வைத்துக் கொண்டு இங்கு வருகிறார்கள்? . இங்கு வாக்கு கேட்க அவர்களுக்கு உரிமையே இல்லை." என தெரிவித்துள்ளார்.

Also Read: ”மோடி பேசுவதை அவரின் நாக்கே நம்பாதபோது” : காதர் மொகிதீன் விமர்சனம்!