India

காவலர்களுக்கு காவி உடை கொடுத்த யோகி ஆதித்யநாத் : அகிலேஷ் கடும் எதிர்ப்பு!

இந்தியாவை எப்படியாவது காவி மயமாக்க வேண்டும் என்ற திட்டத்துடனே கடந்த 10 ஆண்டுகளாக ஒன்றியத்தில் பா.ஜ.க ஆட்சி செய்து வந்தது. கல்வி தொடங்கி அனைத்திலும் தங்களது காவிக் கொள்கையை உட்புகப் பார்த்தது பா.ஜ.க. ஆனால் எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தால் தங்களது திட்டத்தை அவர்களால் முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை.

இருந்தும் பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களில் எவ்விதமான தடையும் இன்றி இந்துத்துவ கொள்கையைச் செயல்படுத்தி வருகிறார்கள். அவர்கள் எந்த அளவிற்குச் செயல்படுகிறார்கள் என்றால் காவல்துறையின் உடையையே காவி உடையாக மாற்றும் அளவிற்கு அவர்களது திட்டம் உள்ளது.

உத்தர பிரதேசத்தில் உள்ள காசிவிஸ்வநாதர் கோயிலில் பாதுகாப்புப் பணிக்காக இருக்கும் காவலர்களுக்குக் காவி உடை கொடுத்துள்ளார் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத். இதற்கு காவல்துறை ஆணையர் மோகித் அகர்வால் ஒரு சப்பைக்கட்டுக் கட்டியுள்ளார்.

அதாவது, "சில நேரங்களில் காவலர்களுக்கும் பக்தர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. அதனால் பூசாரிகள் போல் காவலர்கள் உடை அணிந்து கொண்டால் பணிவுடன் நடந்து கொள்வார்கள்" என்று கூறியுள்ளார்.

இதற்கு எதிர்க்கட்சி தலைவர் அகிலேஷ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் பேசுகையில், “காவல் துறையின் வழக்கத்தின்படி இது சரியா? பூசாரிகளைப் போல காவலர்கள் உடை அணிந்து பணி செய்யலாமா? இந்த உத்தரவைப் பிறப்பித்தவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும். இதை சமூக விரோத சக்திகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பு உள்ளது. இதனால் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படலாம். அதன் பின்னர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில அரசின் பதில் என்னவாக இருக்கும்? இது கண்டனத்துக்குரியது” என தெரிவித்துள்ளார்.

Also Read: ”மதவெறியால் தேசத்தை சூறையாடிய பா.ஜ.க” : சீத்தாராம் யெச்சூரி சாடல்!