India

பொதுதேர்வில் தேர்வுத்தாளை காட்டாத மாணவர் : கத்தியால் குத்திய சக மாணவர்கள் - மஹாராஷ்டிராவில் அதிர்ச்சி !

இந்தியாவில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் பள்ளிகளின் ஆண்டு தேர்வு மற்றும் பொதுத்தேர்வுகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது.

அங்குள்ள தானே மாவட்டத்தில் உள்ள பிவாண்டி எனும் நகரில் உள்ள பள்ளி ஒன்றில் கடந்த மார்ச் 26-ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றுள்ளது. இந்த தேர்வின் போது ஒரு தேர்வு அறையில் விடைத்தாளை காட்டுமாறு ஒரு மாணவரை சக மாணவர்கள் கேட்டுள்ளனர்.

ஆனால், அதற்கு அந்த சிறுவன் மறுத்து தெரிவித்துள்ளார். இதர மாணவர்கள் தொடர்ந்து வற்புறுத்திய நிலையிலும், அந்த சிறுவன் தனது முடிவில் உறுதியாக இருந்துள்ளார். இதன் காரணமாக சக மாணவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

பின்னர் தேர்வு முடிந்ததும் பள்ளியில் இருந்து வெளியே வந்த அந்த மாணவரிடம் சக மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வாக்குவாதம் மோதலாக மாறியுள்ளது. இதில் அந்த மாணவரை இரு மாணவர்கள் பிடித்துக்கொள்ள, மற்றொரு மாணவர் அவரைக் கத்தியால் குத்தி உள்ளார்.

இது உயிருக்கு போராடிய அந்த மாணவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும், காவல்துறைக்கும் இது குறித்து தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், மூன்று மாணவர்கள்மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். கத்தியால் குத்தப்பட்ட மாணவர் தற்போது நலமாக இருப்பதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: ”திமுக அரசின் சாதனைகளை கம்பீரமாக கூறுவேன்” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த சு.வெங்கடேசன்!