India

41 நிறுவனங்களை மிரட்டி ரூ.2417 நிதி பெற்ற பா.ஜ.க : அதிர்ச்சி விவரங்களை வெளியிட்ட பிரசாந்த் பூஷன்!

ஒன்றிய பா.ஜ.க அரசு கடந்த 2018-ம் ஆண்டு தேர்தல் பத்திரம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. தேர்தல் பத்திரத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், ஆகவே இதை ரத்து செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தேர்தல் பத்திர நடைமுறை ரத்து செய்யப்படுவதாக ஒருமித்த தீர்ப்பு வழங்கினர்.

மேலும், தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை SBI வங்கி வெளியிடவேண்டும் என்றும் உத்தரவிட்டனர். முதலில் இதற்கு கால அவகாசம் கேட்ட SBI உச்சநீதிமன்றத்தின் கண்டிப்பைத் தொடர்ந்து அந்த ஆவணங்களைத் தேர்தல் ஆணையத்திடம் அளித்தது. அதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் அந்த அறிக்கைகளை இணையதளத்தில் வெளியிட்டது.

இந்த அறிக்கையில் தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சிகள் பெற்ற நன்கொடை விவரம் வெளியானது. அதில் பாஜகவுக்கே அதிக நன்கொடை சென்றதும் உறுதியானது. மேலும், நிதி ஒதுக்கும் நிறுவனங்களுக்கே அரசு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதும் இதன்மூலம் அம்பலமானது.தற்போது 41 நிறுவனங்களை மிரட்டி ரூ.2471 கோடி பா.ஜ.க நன்கொடை பெற்றுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறை போன்ற அமைப்புகளைக் கொண்டு 41 நிறுவனங்களை மிரட்டி பா.ஜ.க தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.2471 கோடி நன்கொடை பெற்றுள்ளது. மேலும் இந்த நிறுவனங்களில் சோதனை நடந்த மூன்றே மாதத்தில் ரூ.121 கோடி நன்கொடை கொடுத்துள்ளது.

அதேபோல், ரூ.3.7 லட்சம் கோடிக்கு 172 திட்டங்களுக்கு ஒப்பந்தங்கள் பெற்றுள்ள 33 நிறுவனங்கள் ரூ.1751 கோடி நிதியைத் தேர்தல் பத்திரங்கள் மூலமாக பா.ஜ.கவிற்கு கொடுத்துள்ளனர். 49 நிறுவனங்கள் ஒப்பந்தம் கிடைப்பதற்கு முன்பாகவே ரூ.580 கோடி நன்கொடை கொடுத்து இருக்கிறார்கள். உச்சநீதிமன்றத்தில் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் இந்த விவரங்களை வெளியிட்டுள்ளார். இப்படித் தேர்தல் பத்திரங்கள் மூலம் ஒன்றிய பா.ஜ.க அரசு செய்த மிகப்பெரிய ஊழல் ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கிறது.

Also Read: ”ஜனநாயகத்தை நம்பாமல் பயந்து போய் இருக்கும் பாஜக” : கனிமொழி MP விமர்சனம்!