India

கூலி தராததால் வேலைசெய்ய மறுத்த தொழிலாளர்கள்... வீடுகளை கொளுத்திய Contractor ! - குஜராத்தில் பரபர !

குஜராத் மாநிலம் கட்ச் பகுதியை சேர்ந்தவர் முகமது ரஃபீக் கும்பர். கான்ட்ராக்டரான இவர், பல இடங்களில் இருந்தும் கூலிக்கு ஆட்களை வரவழைத்து வேலை பார்த்து வருகிறார். அந்த வகையில், அதே பகுதியில் அமைந்துள்ள அஞ்சார் என்ற இடத்தில் இருந்து கூலிக்கு தொழிலாளிகளை பணியில் அமர்த்தியுள்ளார். சுமார் 15-க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் ரஃபீக் கும்பர் குழுவில் பணிபுரிந்துள்ளார்.

இந்த சூழலில் ரஃபீக் கும்பர், தனக்கு கீழ் பணி புரிந்த தொழிலாளிகளுக்கு கூலியை சரியாக கொடுக்கவில்லை. இதனால் அஞ்சார் பகுதியை சேர்ந்த தொழிலாளிகள், பணிக்கு வர முடியாது என்றும், கூலி கொடுத்தால் மட்டுமே பணிக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். ரஃபீக் கும்பர் கெஞ்சியும், மிரட்டியும் பார்த்துள்ளார். அப்போதும் அவர்கள் வர மறுத்துள்ளனர்.

இந்த நிலையில், அஞ்சார் பகுதி தொழிலாளிகளின் வீடுகள் நேற்றைய முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. சுமார் 15 வீடுகள் தீ பிடித்து எரிந்துகொண்டிருந்த நிலையில், உடனே இதுகுறித்து தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தொடர்ந்து 15 வீடுகளும் எரிந்து சாம்பலானது. அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்த குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என யாருக்கும் எதுவும் ஆகவில்லை. ஆனால் அங்கிருந்த பூனை மற்றும் அதன் 7 குட்டிகள் தீயில் கருகி உயிரிழந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளும்போது ரஃபீக் கும்பர் விவகாரம் தெரியவந்தது.

மேலும் தொழிலாளிகளிடம், உயிருடன் எரித்து விடுவதாகவும் அவர் மிரட்டல் விடுத்ததாக பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் அவரிடம் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: Google Mapயை நம்பாதிங்க : பேனர் வைத்த கிராமம் : காரணம் என்ன?