India

டெல்லி : 40 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த நபர்... 12 மணி நேர போராட்டத்துக்கு பிறகு சடலமாக மீட்பு !

மேற்கு டெல்லியில் அமைந்துள்ளது விகாஸ்புரி என்ற பகுதி. இங்கு கேஷோபூர் ஜல் போர்டு என்று சொல்லப்படும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆழ்துளை கிணறு ஒன்று மூடாமல் இருந்துள்ளது. இந்த சூழலில் நேற்று சுமார் நள்ளிரவு நேரத்தில் நபர் ஒருவர் மூடப்படாத ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார். நீண்ட நேரத்திற்கு பிறகு இவரது கூக்குரலை கேட்ட நபர் ஒருவர், தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதன்பேரில் அதிகாலை சுமார் 2.45 மணியளவில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புப்படை வீரர்கள், உள்ளே விழுந்தது யார் என்று தெரியாமல் தவித்தனர். ஆரம்பத்தில் குழந்தை உள்ளே விழுந்ததாக எண்ணிய அவர்கள், விழுந்தது பெரிய நபர் என்பதை கண்டறிந்தனர். தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர், ஆம்புலன்ஸ் உள்ளிட்டவைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

அந்த ஆழ்துளை கிணறு சுமார் 40 - 50 அடி ஆழம் உள்ளதாக காணப்பட்டதால் மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனினும் விடாமல் முயன்ற மீட்புக் குழுவினர், ஆழ்துளை கிணற்றுக்குள் டார்ச் லைட்டுகள், கேமராக்கள் உதவியுடன் அந்த நபரை அடையாளம் கண்டு தொடர்ந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் அந்த ஆழ்துளை கிணற்றில் அருகே பள்ளம் தோண்டி அதன் மூலம் மீட்கவும் முயன்றனர்.

சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலாக போராடிய நிலையில், ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரை மீட்ட அதிகாரிகள், உடனே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்த போலீசார், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்த நபர் யார் என்று இன்னும் போலீசார் அடையாளம் காணவில்லை. ஒரு வாலிபராக காட்சியளிக்கும் அந்த நபர், குடிநீர் வாரியத்தில் திருடிவிட்டு வெளியேறியபோது, திறந்து கிடந்த ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்திருக்கலாம் என போலிசார் தரப்பில் கூறப்படுகிறது. எனினும் போலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆழ்துளை கிணற்றை மூடி வைக்காமல், அலட்சியமாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணறுகளை 48 மணி நேரத்துக்குள் மூடி சீல் வைக்க வேண்டும் என்றும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Also Read: சந்தேகமாகும் தேர்தல் ஆணையரின் ராஜினாமா : 400 இடங்களில் வெற்றி என கொக்கரிக்கும் பாஜக - விசிக விமர்சனம் !