India

செல்ஃபியால் ஏற்பட்ட கலவரம் : மணிப்பூர் வன்முறையில் 2 பேர் பலியான சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி !

மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே கடந்த ஆண்டு ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இந்த வன்முறையில் மெய்தி சமூகத்தினர், குக்கி பழங்குடியின மக்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த வன்முறையை பாஜக அரசு கண்டும் காணாததுமாய் இருந்து வந்தது.இந்த வன்முறையில் 170-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அங்கு கடந்த ஆண்டு மே 3 மாதம், மணிப்பூரின் காங்கோக்பி மாவட்டத்தின் பி பைனோ கிராமத்தை சேர்ந்த குக்கி பழங்குடி சமூகத்தை சேர்ந்த 2 பெண்களை மெய்தி சமூகத்தை சேர்ந்த தாக்கி, அவர்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக சாலையில் அழைத்து சென்றுள்ளனர்.

அதன் பின்னர் அவர்களை கூட்டு பாலியல் கொடுமைக்கு உள்ளாகியுள்ளனர். மணிப்பூரில் இணையதளம் முடக்கப்பட்டு பின்னர் அங்கு இணையம் மீண்டும் வழங்கப்பட்டபோது சுமார் 3 மாதங்களுக்கு பின்னர் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து நாட்டையே உறையவைத்தது.

அதன் பின்னரும் அங்கு பல்வேறு இடங்களில் தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், இரு நாட்களுக்கு முன்னர் அங்கு மீண்டும் வன்முறை ஏற்பட்டதில் இருவர் கொல்லப்பட்டதால் அங்கு மீண்டும் வன்முறை சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த வன்முறைக்கு தற்போது ஒரு செல்ஃபிதான் காரணமாக இருந்தது என்பது உறுதியாகியுள்ளது.

அங்குள்ள சுரசந்த்பூர் மாவட்டத்தில் ஷியாம்லால் பால் என்ற போலீஸ்காரர் குக்கி இனத்தை சேர்ந்த ஆயுதம் ஏந்திய சிலருடன் சேர்ந்து செல்ஃபி எடுத்துக்கொண்டுள்ளார். இந்த செல்ஃபி சமூகவலைத்தளத்தில் வெளியான நிலையில், அந்த காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பின்னர் அவரை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்று கோரி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தை பலர் முற்றுகையிட்டுள்ளனர்.

அப்போது அங்கு போலிஸார்- போராட்டக்காரர்கள் இடையே வன்முறை ஏற்பட்டுள்ளது. இதனால் கலவரக்காரர்களை கலைக்க அவர்கள் மீது போலீஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியுள்ளனர். இந்த சம்பவத்தில் 25 பேர் காயம் அடைந்த நிலையில், இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: டெல்லி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு : பெரும்பான்மையை நிரூபித்தார் அரவிந்த் கெஜ்ரிவால் !