India

”பாஜகவின் தவறான நிதி கொள்கைகளால் நாட்டின் பொருளாதாரமே பாதிக்கிறது” : எச்சரிக்கும் IMF!

பா.ஜ.க ஆட்சியின் பெருமையை கூறுகிறோம் என்ற பெயரில் கடந்த கால ஆட்சியின் செயல்பாடுகளை விமர்சித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டிருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

காங்கிரஸ் ஆட்சி காலத்தின் பொருளாதார நடவடிக்கைகளை விமர்சித்து கடுமையாகச் சாடி அந்த அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. பா.ஜ.க.வும் தங்களுக்கு இந்த அறிக்கை தேர்தல் நேரத்தில் உதவும் என்ற கனவில் இருந்தன ஆனால்,அவர்களின் எண்ணத்தை தவிடுபொடியாக்கும் வகையில் உலகாளாவிய பொருளாதார அமைப்புகள் சில புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளன.

உலகளவில் பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்த நாடாக கருதப்படும் அமெரிக்காவின் டாலரை இந்திய ரூபாயில் ஒப்பிடுகையிலேயே, உண்மை பாதியளவு வெளிப்படுகிறது என்று சுட்டிக்காட்டுகிறது சர்வதேச நாணய நிதியம் (IMF).

2014 ஆம் ஆண்டு நிதிநிலவரப்படி, ஒரு அமெரிக்க டாலர் என்பது ரூ.60 ஆக இருந்தது ஆனால், இன்று ஒரு டாலரின் மதிப்பு ரூ. 83 ஆக உயர்ந்துள்ளது.வாங்கும் திறன் அதிகம் இருக்கும் அமெரிக்காவில் விற்கப்படும் பெட்ரோலின் விலையை விட, அதிகமாக இங்கு எரிவாயு சிலிண்டர் விற்கப்படுகிறது.

அதாவது அமெரிக்காவை விட இந்தியாவில் வீட்டு உபயோக பொருட்களின் விலை அதிகமாக விற்கப்படுகிறது. இந்த ஒரு உதாரணமே நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை எளிதில் தெளிவுபடுத்துகிறது.

இந்தியாவை உலகின் 3 ஆவது பெரிய பொருளாதார நாடாக்குவதே எங்கள் அரசின் நோக்கம் என்று மார்தட்டியது பா.ஜ.க. நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சி பாதையில் முன்னேற்றுகிறோம் என்றது. ஆனால் , கடந்த ஒன்பது ஆண்டுகளாக எப்போதும் இல்லாத அளவிற்கு கடன்களை வாங்கி குவித்து சாதனை படைத்திருக்கிறது பா.ஜ.க அரசு.

இந்த கடன்களினால் நாட்டின் நீண்ட கால பொருளாதாரத்திற்கே மிகப் பெரிய தடையாக அமையும் என்ற அபாய எச்சரிக்கையயும் விடுத்திருக்கிறது IMF. பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பின் ஒன்றிய அரசின் கடன் எண்ணிக்கை 53% இலிருந்து 73% ஆக அதிகரித்துள்ளது.

அதாவது கடந்த காங்கிரஸ் ஆட்சியோடு ஒப்பிடுகையில் கடன்களின் எண்ணிக்கை 20 சதவீதம் அதிகரித்திருக்கிறது. அதளபாதளத்தில் இருக்கும் இந்த பொருளாதார நிலைமயை உடனடியாக சீராக்கவில்லை என்றால், கடன் அளவு GDPஐ விட அதிகரிக்க வாய்ப்புள்ளதாக IMF எச்சரித்துள்ளது.

இது போன்ற நெருக்கடியான நேரத்தில் கூட ஒன்றிய அரசின் அச்சு ஊடக விளம்பர செலவுகள் குறைக்கப்படவில்லை மாறாக அதிகரித்திருக்கிறது. கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 967.46 கோடிக்கு மோடி விளம்பரத்திற்கு மட்டும் செலவழித்திருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும், பிரதமர் மோடியின் படத்தை பெரிதாக காட்டுவதற்காகவே இவ்வளவு செலவுகளை ஒன்றிய அரசு செய்திருப்பதாக அன்மையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் குற்றம்சாட்டி இருந்தார்.

நாட்டின் பாதுகாப்பு, பணவீக்கம், நிதித் துறை குளறுபடி, பாதுகாப்பற்ற கடன் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை சுட்டிக்காட்டி கடுமையாக எச்சரித்திருக்கின்றன உலக பொருளாதார அமைப்புகள். நாட்டிற்காக வழங்க்கப்பட்டிருக்கும் மிக முக்கியமான எச்சரிக்கையையும் வழக்கம் போல் தட்டிக்கழித்து வருகிறது ஒன்றிய பாஜக அரசு.காரணம் பா.ஜ.க.வின் நோக்கம் நாட்டின் வளர்சசியில் அல்ல, தேர்தலுக்கான வகுப்புவாதத்தில் என்கின்றனர் எதிர்க்கட்சிகள்.

Also Read: ”மகாராஷ்டிர மக்களின் பாதுகாப்பில் விளையாடும் பா.ஜ.க அரசு” : மல்லிகார்ஜூன கார்கே விமர்சனம்!