India

4 வயது குழந்தை கொலை - உடலை சூட்கேசில் எடுத்துச் சென்ற கொடூர தாய் : மனதை பதறவைக்கும் சம்பவம்!

பெங்களூரை சேர்ந்தவர் சுச்சனா சேத். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். இந்நிலையில் இவர் கடந்த 6ம் தேதி தனது 4 வயது மகனுடன் கோவாவுக்கு சென்றுள்ளார். பின்னர் நேற்று காலை தான் தங்கியிருந்த சொகுசு விடுதிக்குத் திரும்பி வந்துள்ளார்.

பிறகு சிறிது நேரத்திலேயே அங்கிருந்து காலி செய்வதாக விடுதி நிர்வாகத்திடம் கூறியுள்ளார். மேலும் தான் பெங்களூருக்குச் செல்ல கார் ஒன்று ஏற்பாடு செய்து கொடுக்கும் படியும் கூறியுள்ளனர். பின்னர் அவரை விடுதி ஊழியர்கள் கார் ஒன்றைத் தயார் செய்து அனுப்பிவைத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சுச்சனா தங்கி இருந்த அறையை விடுதி ஊழியர் சுத்தம் செய்தபோது, அங்கு ரத்தக்கரை இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து இது குறித்து உடனே போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

பிறகு அங்கு வந்த போலிஸார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது மகனுடன் வந்த சுச்சனா திரும்பிச் செல்லும் போது அவர் மட்டுமே காரில் சென்றது தெரியவந்தது. பின்னர் கார் ஓட்டுநரைத் தொடர்பு கொண்ட போலிஸார், சுச்சனாவிடம் அவரது மகன் குறித்துக் கேட்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி, ஓட்டுநரும் மகன் குறித்துக் கேட்டுள்ளார். அதற்கு சுச்சனா, மகனை தோழியின் வீட்டில் விட்டுள்ளதாகக் கூறி ஒரு முகவரியை கொடுத்துள்ளார். பிறகு போலிஸார் அந்த முகவரிக்குச் சென்றபோது அது போலியானது என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து கார் ஓட்டுநரிடம் சுச்சானவை எப்படியாவது அருகே உள்ள காவல்நிலையத்திற்கு அழைத்து வரும் படி போலிஸார் கூறியுள்ளனர்.

இதையடுத்து கார் ஓட்டுநர் அவரை போலிஸார் சொன்ன காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்குத் தயாராக இருந்த போலிஸார் உடனே சுச்சனாவை பிடித்து அவரிடம் இருந்த பெரிய சூட்கேஸை ஆய்வு செய்தனர். இதில் சிறுவனின் சடலம் இருந்ததைக் கண்டித்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்து விசாரணை செய்தபோது, மகனை கொன்று உடலை சூட்கேசில் எடுத்துச் சென்றதை ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் மகனை ஏன் கொன்றார் என்பது குறித்து போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொலை சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: 12 வயதிலேயே ரஞ்சி கோப்பையில் அறிமுகம் : சச்சின், யுவராஜ் சாதனையை தகர்த்தெறிந்த பீகார் சிறுவன் !