India
மோடி Selfie Point - RTI கேள்விக்கு பதில் அளித்த ரயில்வே அதிகாரி பணியிட மாற்றம் : பழிவாங்கிய ஒன்றிய அரசு!
நாடு முழுவதும் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் பிரதமர் மோடியின் செல்ஃபி பூத்கள் பெரும் பொருட் செலவில் அமைக்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடியின் பலவிதமான உருவங்களுடன் கூடிய அந்த செல்ஃபி பூத்களை ஏற்படுத்துவதற்கு பல மாதங்களாக ரயில்வே அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். மோடியின் செல்ஃபி பூத்கள் அமைப்பதற்கு 6 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவு செய்ய ஒன்றிய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
மும்பை, நாக்பூர், புனே, சோலாப்பூர் உள்ளிட்ட 50 ரயில் நிலையங்களில் மோடி செல்ஃபி பூத்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 50 ரயில் நிலையங்களில் தற்காலிகமாக மோடி செல்ஃபி பூத்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளை ரயில்வே மேற்கொண்டுள்ளது. இந்த விவரங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ரயில்வேயிடமிருந்து பெறப்பட்டுள்ளன.
ஓய்வுபெற்ற ரயில்வே அதிகாரியான அஜய் போஸ் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மோடி செல்ஃபி பூத் குறித்து தகவல்கள் கேட்டதற்கு ஒன்றிய ரயில்வே மட்டும் தகவல்களை அளித்துள்ளது. தெற்கு ரயில்வே, வடக்கு ரயில்வே, மேற்கு ரயில்வே நிர்வாகங்கள், மோடி செல்ஃபி பூத் தொடர்பான செலவின விவரங்களை அளிக்கவில்லை என்று அஜய் போஸ் தெரிவித்திருந்தார். 50 ரயில் நிலையங்களில் பிரதமர் மோடியின் செல்பி பூத்களுக்கு செலவிடப்பட்ட விவரங்களை RTI மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு, தற்காலிக பூத் அமைக்க ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாயும், நிரந்திர பூத் அமைக்க 6 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயும் செலவிடப்படுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த செலவினங்கள் குறித்து அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களிடையே கடும் விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், இதுகுறித்த RTI மூலம் தகவல் அளித்த மத்திய ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரியான சிவ்ராஜ் மனஸ்புரே பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆனால், அவர் எந்த இடத்திற்கு பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளார் என்ற விவரங்களை ரயில்வே வெளியிடவில்லை. 2023ம் ஆண்டுக்கான ரயில்வேயில் வழங்கப்படும் உயரிய விருதான ‘Ati Vishisht Rail Seva Puraskar விருதினை பெற்றவர் சிவ்ராஜ் மனஸ்புரே என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, பிரதமர் மோடி உருவத்துடன் கூடிய செல்ஃபி மையத்திற்கான செலவு குறித்து தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதில் அளிக்க ரயில்வே கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
ஆர்.டி.ஐ சட்டத்தின் கீழ் ரயில்வே தொடர்பான தகவல்களை மக்கள் தொடர்பு அதிகாரிகள் வெளியிடக்கூடாது என்றும், சம்பந்தப்பட்ட ரயில் நிலையத்தின் மேலாளர்கள் மட்டுமே வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளளது.
Also Read
-
கோவில் குடமுழுக்கில் பிரச்சனை.. தட்டிக்கேட்ட பெண்ணை கொடூரமாக தாக்கிய தவெக நிர்வாகி -கொந்தளிக்கும் மக்கள்!
-
தவெக அரசின் அட்டூழியம்.. புகாரை அடுக்கிய திமுக.. அதிர்ந்து போன ஆளுநர் மாளிகை! - முழு பட்டியல் இதோ!
-
FIFA 2026: திணறிய அர்ஜென்டினா.. உலகையே திரும்பிப் பார்க்க வைத்த கேப் வெர்டே அணி!
-
"ஆள் பிடிப்பதற்காகவே த.வெ.க ஆட்சி நடக்கிறது!" - ஆளுநரிடம் ஆர்.எஸ்.பாரதி அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!
-
குதிரை பேரத்தில் ஈடுபட்ட விஜய் அரசின் மூக்கு அறுபட்டது; கிரிமினல்கள் நிரம்பிய கேபினட்: இ.பரந்தாமன் பேட்டி