India

சிகரெட் சாம்பலால் சோகம் : 33-வது மாடியில் இருந்து விழுந்த இளைஞர்... நள்ளிரவில் நண்பர் வீட்டில் அதிர்ச்சி!

கர்நாடக மாநிலம் கிழக்கு பெங்களூவில் அமைந்துள்ள பாட்டரஹல்லி என்ற பகுதியில் வசித்து வருபவர் திவ்யன்ஷு ஷர்மா (27) என்ற இளைஞர். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் இஞ்சினியராக இருந்து வருகிறார். உத்தர பிரதேசத்தை சேர்ந் த இவரது தந் தை விமான படையில் பணிபுரிண்டு வருகிறார்.

இந்த சூழலில் இவர் அடிக்கடி தனது நண்பர்களுடன் பார்ட்டி செய்து வந்துள்ளார். அந்த வகையில் நேற்றைய முன்தினம் (30.12.2023) நண்பர்களுடன் பப்பிற்கு சென்றுள்ளார். பிறகு அனைவரும் அதிகாலை சுமார் 2.30 மணியளவில் வீடு திரும்பியுள்ளனர். அப்போது அனைவரும் இவரது நண்பரின் பிளாட்டில் 33-வது மாடியில் உள்ள வீட்டில் இருந்துள்ளனர்.

இவரது நண்பர்கள் தூங்க சென்றபிறகு இவருக்கு தூக்கம் வரவில்லை என்பதால், அறையை சுத்தம் செய்யப்போவதாக நண்பர்களிடம் கூறியுள்ளார். இதனால் அவர்கள் அனைவரும் தூங்க சென்ற பிறகு ஷர்மா மட்டும் அறையை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த சிகரெட் சாம்பலை ஒரு சின்ன பெட்டியில் கொட்டி, அதனை மாடியில் இருந்து கீழே போட எண்ணியுள்ளார். அதன்படி பால்கனி சென்ற இவர், மேலே இருந்து அதனை கீழே போட முயற்சித்துள்ளார்.

அந்த சமயத்தில் கால் இடறி, 33-வது மாடியில் இருந்து சட்டென்று கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் பலியானார். நள்ளிரவு நடைபெற்ற இந்த சம்பவம் யாருக்கும் தெரியவில்லை. இந்த சூழலில் அதே பிளாட்டில் வசிக்கும் சிலர் காலை நேரத்தில் நடைபயிற்சி சென்றபோது சடலத்தை கண்டுள்ளனர். உடனே இதுகுறித்து போலீசுக்கு தகவல் கொடுத்ததோடு, பிளாட்டில் உள்ள குடும்பத்தினர் இருக்கும் வாட்சப் குரூப்பிலும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளனர்.

இதனிடையே வந்த போலீசார், சடலத்தை பரிசோதனை செய்தபோது அவரது உடையில் இருந்த ஐடி கார்டு மூலம் அவரை அடையாளம் கண்டுள்ளனர். தொடர்ந்து இதுகுறித்து அவரது நண்பர்களிடம் விசாரிக்கையில், நடந்தது தெரியவந்தது. எனினும் இது விபத்தா?, கொலையா?, தற்கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ரூ.41 கோடி மதிப்புள்ள மாளிகையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட இந்திய குடும்பம்.. அமெரிக்காவில் அதிர்ச்சி !