India

கர்நாடகாவில் தொடரும் அவலம் : பள்ளி கழிவறையை சுத்தம் செய்த மாணவர்கள் - தலைமை ஆசிரியர் இடைநீக்கம்!

கர்நாடகா மாநிலம் ஷிவமொக்காவில் உள்ள பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியராக இருப்பவர் சங்கரப்பா. இவர் அங்குப் படிக்கும் பட்டியலின மாணவர்கள் சிலரை பள்ளியின் கழிவறையைச் சுத்தம் செய்ய வைத்துள்ளார்.

இதையடுத்து கழிவறையை மாணவர்கள் சுத்தம் செய்யும் வீடியோ சமூக ஊடகத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிறகு உடனே பள்ளி தலைமை ஆசிரியர் சங்கரப்பாவை பள்ளிக் கல்வித்துறை இடைநீக்கம் செய்துள்ளது.

மேலும், துப்பரவ பணிகளுக்குப் பணம் செலவழிக்க முடியாததால் மாணவர்களை வைத்து கழிவறையைச் சுத்தம் செய்ததாகப் பள்ளி தலைமை ஆசிரியர், கல்வித்துறை அதிகாரிகளிடம் கூறியுள்ளார். இதையடுத்து இனி அதுபோன்ற சம்பவங்கள் நடக்காது என மாவட்ட கல்வி அதிகாரி உறுதியளித்துள்ளார்.

அதோடு இப்படி நடப்பது இது முதல்முறை அல்ல. ஏற்கனவே பெங்களூரு ஆந்திரஹள்ளி பகுதியில் உள்ள ஒரு பள்ளியிலும் இதுபோன்று மாணவர்களை வைத்து கழிவறை சுத்தம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கோலார் மாவட்டத்திலும் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. தற்போது மூன்றாவதாக ஷிவமொக்காவில் மாணவர்களை வைத்து கழிவறை சுத்தம் செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “மழை வெள்ளத்திலும் மட்டமான அரசியல் செய்யும் பாஜக”: விவாத நிகழ்ச்சியில் மோடி அரசை வெளுத்து வாங்கிய கனகராஜ்