India

பொதுவெளியில் பாலியல் அத்துமீறல் : சிக்கிய Petrol Bunk ஊழியர்.. சுற்றுலா வந்த ரஷ்ய பெண்ணுக்கு நடந்த சோகம்!

உலகம் முழுவதிலும் இருந்து இந்தியாவிற்கு நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அவர்கள் இந்தியாவில் இருக்கும் சிற்பக்கலைகள், கலாச்சாரங்கள், ஆடை அலங்காரங்கள் உள்ளிட்டவையை அறிந்துகொள்கின்றனர். இதனை சிலர் புகைப்படம் பிடித்தோ அல்லது வீடியோ எடுத்தோ தங்களது வலைதளங்களில் பதிவேற்றுகின்றனர்.

இப்படி இந்தியா வரும் சில பெண்களிடம் சிலர்பாலியல் ரீதியான அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி ஒரு சம்பவம் தான் தற்போதும் நடைபெற்றுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் ரஷ்யாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது நண்பருடன் பைக்கில் வந்து பெட்ரோல் போட்டுள்ளார்.

அப்போது அங்கிருந்த பெட்ரோல் பங்க் ஊழியர் ஒருவரது கை அந்த பெண்ணின் மீது திடீரென பட்டுள்ளது. ஆரம்பத்தில் தெரியாமல் பட்டுவிட்டதோ என்று எண்ணிய நிலையில், மீண்டும் மீண்டும் தொடர்ந்து 3 முறை தகாத முறையில் அவரது கை அந்த பெண் மீது பட்டுள்ளது. இதனை கண்ட அந்த பெண்ணின் நண்பர், உடனே ஊழியரிடம் சண்டை போட்டுள்ளார். அதற்கு அவரோ, தெரியாமல் கை பட்டுவிட்டதாக கூறியுள்ளார்.

இதனால் தொடர்ந்து அந்த இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே இந்த விவகாரத்தை அந்த பெண்ணின் நண்பர், தனது மொபைல் போனில் வீடியோவாக எடுத்துள்ளார். தொடர்ந்து இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் இதுகுறித்து விசாரித்தனர். பிறகே அந்த ஊழியர் அந்த பெண் மற்றும் இளைஞரிடம் மன்னிப்பு கேட்டார்.

தொடர்ந்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார், பெட்ரோல் பங்க் ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள விசாரித்து வருகின்றனர். தற்போது இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இது போன்ற சம்பவங்களுக்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மும்பை வந்திருந்த தென்கொரிய பெண்ணுக்கு இதுபோல் இளைஞர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சூழலில் தற்போது பாஜக ஆளும் ராஜஸ்தானிலும் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது கண்டனங்களை எழுப்பியுள்ளது.

Also Read: சீனாவில் திடீரென நள்ளிரவில் ஏற்பட்ட நிலநடுக்கம்.. தரைமட்டமான 5 ஆயிரம் கட்டடம் : 100 பேர் பலி !