India

31 துண்டுகளாக வெட்டி கொல்லப்பட்ட பழங்குடி பெண்... கைது செய்யப்பட்ட தம்பதி... - காரணம் என்ன ?

ஒடிசா மாநிலத்தில் அமைந்துள்ள நகரங்பூர் என்ற பகுதியை அடுத்துள்ளது முருமதிஹி என்ற கிராமம். இங்கு திலாபாய் (22) என்ற இளம்பெண் ஒருவர் தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார். இந்த சூழலில் இவர் கடந்த வாரம் புதன்கிழமை வீட்டில் இருந்து திடீரென காணாமல் போயுள்ளார். இதைத்தொடர்ந்து அவரது உறவினர்கள் அனைவரும் அந்த பகுதியை அலசி ஆராய்ந்தும் அவர் கிடைக்கவில்லை.

இதனால் வேறு வழியின்றி போலீசில் திலாபாயின் குடும்பத்தினர் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலிசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் கடந்த சனிக்கிழமையன்று முருமதிஹி வனப்பகுதியில் அடையாளம் தெரியாத ஒருவரது உடல் துண்டுதுண்டாக வெட்டப்பட்ட நிலையில் இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி விசாரித்தபோது, அது காணாமல் போன திலாபாய் என்று தெரியவந்தது. இதைத்தொடர்ந்து விசாரித்தபோது, பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை, சந்திரா ராவத் என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து அவரது வீட்டுக்கு விரைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது கணவன் மனைவியிடம் துருவி துருவி விசாரித்ததில் அவர்கள் பதில் சந்தேகப்படும்படி இருந்தது. இதையடுத்து அவர்களிடம் போலீசார் நடத்திய கிடுக்குபிடி விசாரணையில் கொலையை செய்தது தாங்கள் தான் என்று தம்பதி ஒப்புக்கொண்டனர். அதாவது, திலாபாய்க்கும், சந்திரா ராவத்துக்கும் இரகசிய காதல் உறவு இருந்துள்ளது. இதனால் திலாபாய், தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று அவரை தொல்லை கொடுத்துள்ளார்.

ஒருகட்டத்தில், பொறுமை இழந்த திலாபாய், நேராக சந்திரா ராவத்தின் வீட்டுக்கே சென்று இனி எங்கும் செல்லப்போவதில்லை என்றும், தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறும் வற்புறுத்தியுள்ளார். இந்த விவகாரம் சந்திரா ராவத்தின் மனைவி ஷியாவுக்கு தெரியவே, பெரிதாக சண்டை ஏற்பட்டுள்ளது இந்த சண்டையில் திலாபாய் கடுமையாக தாக்கப்பட்டார்.

தொடர்ந்து நடந்த கைகலப்பில் அருகில் இருந்த ஆயுதம் கொண்டு திலாபாய் மீது தாக்கினர் அந்த தம்பதி. இதில் சம்பவ இடத்திலேயே அந்த இளம்பெண் உயிரிழந்தார். இதையடுத்து சடலத்தை மறைக்க எண்ணிய தம்பதி, திலாபாயின் உடலை 31 பாகங்களாக துண்டு துண்டாக வெட்டி, அவரது வீட்டுக்கு சுமார் 300 மீட்டர் தொலைவில் உள்ள காட்டுப்பகுதியில் வீசியுள்ளது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து தம்பதியை கைது செய்த போலீசார், தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரகசிய காதலால் இளம்பெண் ஒருவரை கணவன் மனைவி சேர்ந்து கொலை செய்து 31 துண்டுகளாக வெட்டி வீசியுள்ள சம்பவம் ஒடிஸாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: கடத்தப்பட்ட சிறுமி.. ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல்.. 20 மணி நேரத்தில் மீட்ட போலிஸ் ! - பின்னணி என்ன?