India

இஸ்லாமிய மாணவரை சக மாணவர்களை வைத்து தாக்கிய ஆசிரியர்: உ.பி அரசின் செயலுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் !

உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சி நடைபெறுகிறது. முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் உள்ளார். இம்மாநிலத்தில் தொடர்ச்சியாக இஸ்லாமிய மக்கள் மீதான தாக்குதல் மற்றும் வெறுப்பு பேச்சு அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்களிடையேயும் பிரிவினை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இத்தகைய உத்தரபிரதேசத்தில் சில நாட்களுக்கு முன்னர் பள்ளி ஒன்றில் ஆசிரியரே இந்து மாணவர்களிடம் இஸ்லாமிய மாணவனை தாக்கச் சொல்லும் வீடியோ ஒன்று வெளியாகி நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது குறித்து வெளியான வீடியோவில், இஸ்லாமிய மாணவர் ஒருவர் நிற்கிறார். அந்த மாணவரை அடிக்குமாறு ஆசிரியர் திருப்தா தியாகி என்பவர் கூறியவுடன் முதலில் ஒருவர் அந்த மாணவரை அடிக்கிறார். அதன்பின்னர் அடுத்தடுத்து பிற மாணவர்கள் அடிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

இந்த அதிர்ச்சி சம்பவம் முசாபர் நகரில் செயல்பட்டுவரும் பள்ளி ஒன்றில் நடந்துள்ளது. இந்த விவகாரத்தில் எதிர்கட்சிகளின் வலியுறுத்தல் காரணமாக ஆசிரியை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், மீறி பாதிக்கப்பட்ட மாணவருக்கு ஆலோசனை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், நீதிமன்றத்தின் உத்தரவை உ.பி அரசு செயல்படுத்தவில்லை. இதன் காரணமாக இது குறித்து விளக்கமளிக்க கல்வித் துறை முதன்மைச் செயலர் டிசம்பர் 11-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இது குறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், ”செப்டம்பர் 25 முதல் அவ்வப்போது நீதிமன்றம் பிறப்பித்த பல்வேறு உத்தரவுகளுக்கு உ.பி. மாநிலம் மற்றும் குறிப்பாக கல்வித் துறை இணங்கவில்லை என்பதை நாங்கள் காண்கிறோம். பாதிக்கப்பட்ட குழந்தை மற்றும் சம்பந்தப்பட்ட பிற குழந்தைகளுக்கு முறையான கவுன்சிலிங் நடத்தப்படவில்லை. இது அதிர்ச்சியளிக்கிறது” என்று கூறியுள்ளனர்.