India

பட்டப்பகலில் கொள்ளை.. BMW கார் கண்ணாடியை உடைத்து உள்ளே பாய்ந்த இளைஞர் : காட்டிக்கொடுத்த CCTV !

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அமைந்துள்ளது சர்ஜாபூர். இங்கு பட்டப்பகலில் பார்க்கிங் பகுதியில் நின்று கொண்டிருந்த கார் கண்ணாடியை உடைத்து 2 திருடர்கள், அதில் இருந்த ரூ.13 லட்ச பணத்தை திருடி சென்றுள்ள சம்பவம் தொடர்பான சிசிடிவி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, ஆனேக்கல் என்ற பகுதியை சேர்ந்த பாபுஎன்பவர், தனது BMW காரில் கடந்த 20-ம் தேதியன்று பகல் நேரத்தில் சர்ஜாபூர் பகுதிக்கு பணி நிமித்தமாக சென்றுள்ளார். அப்போது தனது காரை அங்கிருந்த பார்க்கிங் பகுதியில் விட்டுவிட்டு உள்ளே சென்றுள்ளார். சில மணி நேரம் கழித்து மீண்டும் வந்து பார்க்கையில் அவரது காரின் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது.

இதனை கண்டு பதறிய அவர், உள்ளே பார்த்தபோது, அவர் கொண்டு வந்த ரூ.13 லட்சம் பணம் காணாமல் போனது தெரியவந்தது. இதனால் பெரும் பயத்தில் இருந்த இவர், இதுகுறித்து சர்ஜாபூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்க்கையில் 2 திருடர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

அதாவது 2 இளைஞர்கள் முகமூடி அணிந்து அங்கே இருந்துள்ளனர். அதில் ஒருவர் பைக்கிலும், மற்றொருவர் கார் அருகிலும் நின்று கொண்டிருந்தனர். அதில் பைக்கை ரெடியாக ஸ்டார்ட் செய்து வைத்திருந்தார் ஒருவர். மற்றொருவர் அந்த கார் கண்ணாடியை 3 அடியில் உடைத்து காருக்குள்ளே பாய்ந்து அதில் இருந்த பணத்தை எடுத்து சென்றுள்ளது சிசிடிவி காட்சி மூலம் கண்டறியப்பட்டது.

பட்டப் பகலில், யாரும் பார்க்காத நேரத்தில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து இது திட்டமிட்ட கொள்ளை என்பதை உறுதி செய்த போலீசார், தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து அந்த கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: 11 வயது சிறுவனை கொடூரமாக கடித்த தெரு நாய்.. 3 மணி நேரம் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை.. பிறகு நடந்தது என்ன ?