India

அரசு வேலைக்கு ஆசை: போட்டியாக வந்த தங்கைகளை ஸ்லோ பாய்சன் வைத்து கொலை செய்த கொடூர அண்ணன்- முழு விவரம் என்ன?

மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் பகுதியை அடுத்துள்ளது அலிபாக் என்ற கிராமம். இங்கு சோனாலி மோஹித் (34) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கணேஷ் மோஹித் (36) என்ற அண்ணனும், சினேகா மோஹித் (30) என்ற தங்கையும் உள்ள நிலையில், இவர்களது தந்தை கடந்த 2009 ஆண்டு உயிரிழந்தார். வனத்துறையில் பணியாற்றி வந்த இவர், உயிரிழந்ததை தொடர்ந்து, இவரது பணியை கருணை அடிப்படையில் தனது மகள்களுக்கு பெற விரும்பியுள்ளார் இவர்களது தாய்.

ஆனால் இதில் விருப்பமில்லாத கணேஷ், இவர்களிடம் சண்டையிட்டுள்ளார். மேலும் சொத்துகளையும் தனது பெயருக்கு மாற்ற வேண்டும் என்று வாதம் செய்துள்ளார். இதையடுத்து இந்த விவகாரத்திற்கு சமரசம் பேச தாய் முயன்று, ஒரு வழியாக வனத்துறையில் சேர்ந்துள்ள சகோதரியின் சம்பளத்தை பிரித்துக்கொள்ளலாம் என்று முடிவுக்கு வந்துள்ளனர்.

அதன்படி சகோதரி பணியாற்றி, அவருக்கு வரும் சம்பளத்தில் ஒரு பங்கை கணேஷிற்கு கொடுக்க வேண்டும். மேலும் சொத்தை 3 பங்காக பிரிக்க வேண்டும் என்பதில் கணேஷிற்கு உடன்பாடில்லை. இதைத்தொடர்ந்து, அவர் தனது சகோதரிகளை கொலை செய்ய எண்ணியுள்ளார். அதன்படி அவர்களுக்கு சாப்பாட்டில் ஸ்லோ பாய்சன் கலந்து கொடுத்துள்ளார். அதனை சாப்பிட்ட இவர்களுக்கு உடல்நலக்கோளாறு ஏற்பட்டுள்ளது.

எனவே கடந்த அக்.16-ம் மூத்த சகோதரி சோனாலிக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரை தொடர்ந்து இவரது தங்கை சினேகாவும் உடல்நல பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கே அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக பன்வேலில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த 20-ம் தேதி உயிரிழந்தார். இதனிடையே தனது நிலைமைக்கும், தனது அக்காவின் மரணத்திலும் தன்னுடைய சகோதரர் கணேஷ் மீது சந்தேகம் இருப்பதாக போலீசிடம் மரண வாக்குமூலம் அளித்திருந்தார் சினேகா.

அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், சொத்துக்காக தனது சகோதரிகளை கணேஷ்தான் கொலை செய்ததை கண்டறிந்தனர். இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: துப்பாக்கியால் சுடப்பட்டு பெண் காவலர் கொலை : ஹோட்டல் அறையில் கணவர் வெறிச்செயல் - பிகாரில் அதிர்ச்சி !