India

பாத்ரூமில் தாயின் உடல்.. மயங்கி விழுந்ததாக மகனிடம் நாடகமாடிய தந்தை.. டெல்லியில் என்ன நடந்தது ?

தெற்கு டெல்லியில் அமைந்துள்ள அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் வேத் பிரகாஷ் (52). இவருக்கு திருமணமாகி சுஷிலா (50) என்ற மனைவியும், ஆகாஷ் என்ற மகனும் உள்ளனர். பிரகாஷும் சுஷிலாவும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சிறு சிறு விஷயங்களுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அது ஒரு கட்டத்தில் தினமும் நடக்க தொடங்கியது. மகன் ஆகாஷ் வீட்டின் மேல் பகுதியில் இருந்து வந்த நிலையில், பெற்றோர் கீழே வசித்து வந்துள்ளனர்.

இந்த சூழலில் சுஷிலா வேலைக்கு செல்ல நினைத்துள்ளார். ஆனால் அதற்கு அவரது கணவர் பிரகாஷ் சம்மதிக்கவில்லை. இதன் காரணமாகவும் இருவருக்குள்ளும் சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், சம்பவத்தன்று இருவருக்குள்ளும் ஏற்பட்ட வாய் தகராறில் கைகலப்பு ஏற்படவே ஆத்திரத்தில் சுசிலாவின் கழுத்தை இறுக்கமாக நெரித்துள்ளார் அவரது கணவர் பிரகாஷ்.

இதில் மூச்சு திணறி மயங்கிய சுஷிலாவை, தனது வீட்டின் பாத்ரூமில் ஒளித்து வைத்துள்ளார். சில மணி நேரம் கழித்து, தனது மகனை அழைத்துள்ளார். பின்னர் பாத்ரூமில் இருந்த சுஷீலாவை இழுத்து வந்து, கீழே விழுந்து மயக்கமடைந்து விட்டதாக நாடகமாடியுள்ளார். எனினும் அவர் துருவி துருவி கேட்டதையடுத்தே துப்பட்டாவால் கழுத்தை இறுக்க நெரித்து விட்டதாக கூறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ந்த மகன், தனது தாயை மீட்டு மருத்துமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மேலும் அவரது உடல்களில் பலத்த காயம் இருப்பதும், கழுத்து நெறிக்கப்பட்டதும், நெற்றி போன்ற பல இடங்களில் காயங்கள் இருந்ததையும் மருத்துவர்கள் கண்டறிந்தனர். தொடர்ந்து இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து விசாரிக்கையில், நடந்தவற்றை பிரகாஷ் ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

மனைவி வேலைக்கு சென்றதால் ஆத்திரப்பட்ட கணவர் சண்டையிட்ட நிலையில், அந்த சண்டை முற்றிப்போகவே மனைவியின் கழுத்தை நெரித்து கணவரே கொலை செய்துள்ள சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ராஜினாமா செய்யாவிட்டால் கொலை செய்வோம்- அமெரிக்காவில் சீக்கிய மதத்தை சேர்ந்த நகர மேயருக்கு கொலை மிரட்டல்!