India

13 ஆண்டுகள் கழித்து எழுத்தாளர் அருந்ததி ராய் மீது வழக்கு பதிவு செய்ய அனுமதி : பழிவாங்கும் ஒன்றிய அரசு!

எழுத்தாளர், சமூக ஆர்வலர், அரசியல் விமர்சகர் என பன்முகத்தன்மை கொண்டவர் கேரளாவை சேர்ந்த அருந்ததி ராய். எங்குப் பெண்களுக்கும், சாமானிய மக்களும் ஒடுக்கப்படுகிறார்களோ அங்கு இவரது குரல் கேட்கும்.

இந்நிலையில் 13 ஆண்டுகளுக்கு முன்பு இவர் நிகழ்ச்சி ஒன்றில் காஷ்மீர் குறித்துப் பேசியதற்கு தற்போது மீண்டும் வழக்குப் பதிவு செய்ய டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா அனுமதி அளித்துள்ளார்.

2010ம் ஆண்டு Azadi The Only Way என்ற தலைப்பில் மாநாடு ஒன்று நடைபெற்றது. இதில் எழுத்தாளர் அருந்ததி ராய், முன்னாள் பேராசிரியர் ஹீசைன், சையத் அலி ஷா கிலானி, வரவர ராவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசியுள்ளனர்.

இவர்கள் காஷ்மீர் இந்தியாவிலேயே இல்லை என பிரிவினை வாதத்தைப் பேசியதாகக் கூறி காஷ்மீரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சுஷில் பண்டிட் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இதையடுத்து தேசத்துரோக சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் 13 ஆண்டுகள் கழித்து மீண்டும் எழுத்தாளர் அருந்ததி ராய் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யத் துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா அனுமதி அளித்துள்ளார். இதற்குக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், "டெல்லி துணை நிலை ஆளுநரின் நிர்வாகத்தில் சகிப்புத்தன்மைக்கு இடமே இல்லை. கருத்துச் சுதந்திரத்திற்கு எப்போதும் என்னுடைய ஆதரவு உண்டு. தேசவிரோத சட்டத்தை நீக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

Also Read: “நல்லா ஸ்மார்ட்டா இருக்கீங்க.. ஏன் இன்னும் கல்யாணம் செய்யல?”-மாணவிகள் கேள்விக்கு ராகுல் காந்தியின் பதில்?