India

போலீசாருக்கு பயந்து ஓட்டம்.. மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்த இளைஞர்கள்.. கைதான வயல் உரிமையாளர் !

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஷிஜித் (22) மற்றும் சதீஷ் (22). இவர்கள் சில அடிதடி வழக்கில் சிக்கி போலீசாரால் தேடப்பட்டு வந்துள்ளனர். இதன் காரணமாக இவர்கள் தலைமறைவாக இருந்த நிலையில், இவர்கள் பதுங்கியிருந்த இடம் குறித்து போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி கடந்த திங்கள்கிழமை அன்று, அவர்கள் இருந்த இடத்துக்கு போலிஸார் சென்றுள்ளனர். அப்போது போலீசாரை பார்த்த இருவரும் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். பின்னர் அவர்களை காணாமல் போலீசாரும் காவல் நிலையத்துக்கு திரும்பியுள்ளனர்.

ஆனால், அப்படி தப்பி சென்ற இருவரும், ஆனந்தகுமார் என்பவரின் வயல் பகுதிக்கு சென்றபோது அங்கு வனவிலங்குகள் வராமல் தடுக்க வைக்கப்பட்டிருந்த வேலியில் சிக்கி அங்கேயே இறந்துள்ளனர். அப்போது அங்கு வந்த ஆனந்தகுமார் இறந்து கிடந்த இருவரின் உடலையும் பார்த்துள்ளார்.

தொடர்ந்து சட்டவிரோதமாக மின்வேலி அமைத்து அதன் காரணமாக இருவர் இறந்ததால் தன்மீது நடவடிக்கை பாய்ந்துவிடும் என பயந்த அனந்தகுமார், இரண்டு இளைஞர்களையும் வயலில் புதைத்துள்ளார். பின்னர் ஏதும் நடக்காதது போல அங்கிருந்து சென்றுள்ளார்.

ஆனால், அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சிலர் இது குறித்து காவல்நிலையத்துக்கு தெரிவிக்க அவர்கள் சோதனை நடத்தியதில், அந்த பகுதியில் புதைக்கப்பட்டிருந்த ஷிஜித் மற்றும் சதீஷ் ஆகியோரின் சடலத்தை கண்டுபிடித்தனர். இதையடுத்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலிஸார் ஆனந்தகுமாரை கைதுசெய்துள்ளனர்.

Also Read: வயிறு வலியால் துடித்த மாற்றுத்திறனாளி.. பரிசோதனையில் சிக்கிய 7UP பாட்டில்.. அதிர்ச்சியின் பின்னணி ?