India

”இந்தியாவின் இதயத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்".. ம.பி பா.ஜ.க அரசுக்கு ராகுல் காந்தி கண்டனம்!

மத்திய பிரதேச மாநிலத்தில் சிவராஜ் சிங் செளகான் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு அமைந்திருக்கும் உஜ்ஜைன் பகுதியில் 12 வயது சிறுமி ஒருவர் ரத்தக்கறையுடன் ஒவ்வொரு வீட்டுக் கதவையும் தட்டி உதவி கேட்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2 மணி நேரத்திற்கு மேல் சிறுமி ரத்தக்கறையுடன் இருந்ததைப் பார்த்த ஒருவர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்குச் சிறுமியை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது அவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்தது.

பின்னர் இது குறித்து மருத்துவர்கள் போலிஸாருக்கு தெரிவித்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மனதை உலுக்கும் இச்சம்பவத்திற்குப் பலரும் கடும் எதிர்வினைகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவின் இதயத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என இந்த கொடூர சம்பவத்தைக் குறிப்பிட்டு பா.ஜ.க அரசுக்கு ராகுல் காந்தி எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள x சமூகவலைதள பதிவில், "மத்திய பிரதேசத்தில் 12 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் இந்தியாவின் இதயத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல். இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மட்டும் குற்றவாளிகள் அல்ல. அம்மாநில பா.ஜ.க அரசும் குற்றவாளிதான். இந்த சம்பவத்தால் நாடே வெட்கப்படுகிறது. ஆனால் அம்மாநில முதல்வருக்கும் பிரதமர் மோடிக்கும் அவமானமாகத் தெரியவில்லை" என கண்டித்துள்ளார்.

Also Read: புகாரளிக்க வந்த தலித் பெண்.. மயக்க மருந்து கொடுத்து வன்கொடுமை செய்த சப்-இன்ஸ்பெக்டர்- உ.பியில் அதிர்ச்சி!