India

மணிப்பூர்: ஆயுத குழுக்களிடம் சிக்கிய இளைஞர், சிறுமி.. இறந்து கிடக்கும் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சி !

மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வெடித்து வன்முறையாக மாறியுள்ளது. இந்த வன்முறையில் மெய்தி சமூகத்தினர், குக்கி பழங்குடியின மக்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். சுமார் 90 நாட்களுக்கு மேலாக நடைபெற்ற இந்த வன்முறையை பாஜக அரசு கண்டும் காணாததுமாய் இருந்து வந்துள்ளது.இந்த வன்முறையில் 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அங்கு கடந்த மே 3 ஆம் தேதி மணிப்பூரின் காங்கோக்பி மாவட்டத்தின் பி பைனோ கிராமத்தை சேர்ந்த குக்கி பழங்குடி சமூகத்தை சேர்ந்த 2 பெண்களை மெய்தி சமூகத்தை சேர்ந்த தாக்கி, அவர்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக சாலையில் அழைத்து சென்றுள்ளனர்.

அதன் பின்னர் அவர்களை கூட்டு பாலியல் கொடுமைக்கு உள்ளாகியுள்ளனர். மணிப்பூரில் இணையதளம் முடக்கப்பட்டு பின்னர் அங்கு இணையம் மீண்டும் வழங்கப்பட்டபோது சுமார் 3 மாதங்களுக்கு பின்னர் இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்து நாட்டையே உறையவைத்தது.

இந்த நிலையில் அங்கு காணாமல் போன 20 வயது மாணவனும், அவரின் தோழியான 17 வயது மாணவியும் காட்டில் இறந்த நிலையில் கிடக்கும் புகைப்படம் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிஜாம் ஹெம்ஜித் என்ற மாணவரும்,அவரின் தோழியான ஹிஜாம் லிந்தோயிங்காம்பி என்பவரும் கடந்த ஜூலை 6-ம் தேதி காணாமல் போயுள்ளனர்.

அப்படி காணாமல் போனவர்களின் சடலங்கள் கிடக்கும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. அந்த இருவரும் ஆயுதமேந்திய குழுவிடம் சிக்கியிருக்கும் புகைப்படம் முதலில் வெளியான நிலையில், பின்னர் அவர்கள் காட்டின் நடுவில் இறந்துகிடக்கும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. அவர்கள் உடல்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து விளக்கமளித்த மாநில அரசு, " இந்த வழக்கு ஏற்கெனவே சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. மாணவர்கள் காணாமல்போன சூழ்நிலையைக் கண்டறியவும், இரண்டு மாணவர்களைக் கொலைசெய்த குற்றவாளிகளை அடையாளம் காணவும் தீவிரமாக வழக்கு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்று கூறியுள்ளனர்.

Also Read: பாஜகவோடு கூட்டணி.. மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியிலிருந்து விலகும் முக்கிய தலைவர்கள்.. கர்நாடகாவில் பரபரப்பு