India

இரயில் பிளாட்பாரத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி ஒத்திகை.. இளைஞரை அலேக்காக தூக்கிய போலிஸ்.. பின்னணி என்ன ?

புதுச்சேரி ஒதியஞ்சாலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில் நேற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரயில் நிலையம் அருகே பயங்கர வெடிசத்தம் கேட்டது. இதனை கேட்டதும் பதறியடித்த போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்தபோது, இரயில் நிலையத்தின் 4-வது பிளாட்பாரத்தில் உள்ள தண்டவாளம் அருகே புகை மண்டலமாக காட்சி அளித்தது.

இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வந்து பார்த்து அங்கு சிதறி கிடந்த பேப்பர், கண்ணாடி துண்டுகள், ஆணிகள் மற்றும் சிறு சிறு கற்களை சேகரித்தனர். தொடர்ந்து இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது இந்த காரியத்தை செய்தது அரியாங்குப்பத்தை சேர்ந்த ரவிகாந்த் ஜான்மேரி என்கிற பரத் (19) என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவரை பிடித்து விசாரிக்கையில், கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு துக்க நிகழ்விற்காக வாணரப்பேட்டைக்கு பரத் சென்றுள்ளார். அப்போது சவ ஊர்வலத்தில் ஆடிகொண்டிருந்த போது அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தனுஷ் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் தனுஷ், பரத்தை தாக்கிவிட்டு சென்றுள்ளார்.

இதனால் கடும் கோபம் கொண்ட பரத், அவரை கொலை செய்ய எண்ணியுள்ளார். அதன்படி தான் வைத்திருந்த பட்டாசுகளை கொண்டு நாட்டு வெடிகுண்டு தயாரித்துள்ளார். அதனை இரயில் நிலைய தண்டவாளத்தில் சோதனை செய்துள்ளார். இவையனைத்தும் விசாரணை தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: Loan App மூலம் ரூ.15 ஆயிரம் கடன்.. மிரட்டி ரூ.3 லட்சம் வரை பறித்த கும்பல்.. எச்சரிக்கும் சைபர் போலிஸ் !