India

தினமும் ரூ.40 லட்சம்.. 600 அமெரிக்கர்களிடம் பல கோடி மோசடி : டெல்லியில் செயல்பட்டு வந்த Call Centre!

டெல்லி அருகே உள்ள நொய்டாவில் ஒரு கால் சென்டரில் டார்க் வெப் பயன்படுத்தி மோசடி நடைபெறுவதாக போலிஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலிஸார் அங்குச் சென்று ஆய்வு செய்தபோது அமெரிக்கர்களைக் குறிவைத்து லட்சக்கணக்கில் மோசடி நடைபெற்றது தெரியவந்துள்ளது.

நொய்டாவைச் சேர்ந்த ஹர்ஷித் குமார் மற்றும் யோகேஷ் பண்டிட் இவர்கள் இரண்டு பேர்தான் இந்த மோசடிக்கு மூளையாக இருந்துள்ளனர். இவர்கள் ஒரு கால் சென்டரை அமைத்து ஊழியர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளனர். மேலும் அமெரிக்க மக்களுக்கு அரசு நல திட்டங்களைப் பெறுவதற்காக ஒவ்வொருவருக்கும் ஒன்பது இலக்கு கொண்டு எண் வழங்கப்பட்டு வருகிறது. இந்த எண்ணை டார்க் வெப் மூலம் எடுத்துள்ளனர்.

இதையடுத்து இந்த எண்ணைக் கொண்டவர்களைத் தொடர்பு கொண்டு , அரசு நலத் திட்டங்களைப் பெறுவதற்கான எண் ரத்து செய்யப்பட உள்ளது. இதனால் உங்கள் வங்கிக் கணக்கு முடக்கப்படலாம் எனவே உங்களது வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை கிரிப்டோ கரன்சியாக மாற்றிக் கொள்ளுங்கள் என அதிகாரிகள் போல் பேசியுள்ளனர். இப்படி 4 லட்சம் அமெரிக்கர்களைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.

இதை உண்மை என நம்பி 600க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் தங்களது பணத்தை கிரிப்டோ கரன்சியாக மாற்றியுள்ளனர். இந்த பணத்தை இந்த கும்பல் மோசடி செய்துள்ளது. இப்படி தினமும் ரூ. 40 லட்சம் வரை மோசடி செய்துள்ளனர்.

மேலும் இந்த கால் சென்டரில் பணியாற்றிய ஊழியர்களுக்கு அதிக ஊதியம் கொடுத்ததால் உண்மையை இவர்கள் வெளியே சொல்லாமல் இருந்துள்ளனர். இதையடுத்து கால் சென்டரில் பணியாற்றிய 38 பெண்கள் உட்பட 84 பேரை போலிஸார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் இருந்த150 கணினிகள் மற்றும் ரூ.20 லட்சம் பணத்தைப் பறிமுதல் செய்துள்ளனர். அதேடு தலைமறைவாக உள்ள கால் சென்டர் உரிமையாளர்கள் ஹர்ஷித் குமார், யோகேஷ் பண்டிட் ஆகிய இருவரையும் போலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Also Read: காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ‘நாட்டு நாட்டு’ பாடகர் ராகுல்? - வெளியான தகவலுக்கு அவர் அளித்த விளக்கம் !