India

விடுறையை கழிக்கச் சென்ற இடத்தில் நடந்த துயரம்.. இரண்டு நண்பர்கள் ஆற்றில் மூழ்கி பரிதாப பலி!

புதுச்சேரி வில்லியனூர் அருகே உள்ள தொண்டமானத்தம் மீனாட்சி பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் புகழேந்தி. இவரது மகன் பரத். இவர் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார்.

இவருடன் சிவா, தாரகேஸ்வரன், கலையரசன், ராகுல், கமலேஷ் ஆகியோர் படித்து வந்துள்ளனர். அதேபோல் அதேபகுதியில் உள்ள ஜெராக்ஸ் கடையில் வேலை பார்த்து வரும் விஷ்வா இவர்களுடன் பழக்கம் ஏற்பட்டு நண்பர்களாகப் பழகி வந்துள்ளார்.

இந்நிலையில் முத்திரையர்பாளையம் பகுதியில் கோவில் திருவிழா என்பதால் பள்ளிக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் பரத், விஷ்வா உள்ளிட்ட நண்பர்கள் 7 பேரும் வில்லியனூர் அருகே உள்ள சங்கரபரணி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர்.

அப்போது பரத், விஷ்வா தவிர்த்து மற்ற 5 பேரும் கரையோர பகுதியில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் இருவர் மட்டுமே அங்குள்ள ஒரு மரத்தின் மீது ஏறி ஆற்றின் ஆழமான பகுதியில் குதித்துள்ளனர். அப்போது தண்ணீர் உள்ளே சென்ற இருவரும் மீண்டும் மேலே வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்களது நண்பர்கள் அப்பகுதியில் தேடி பார்த்துள்ளனர். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை.

உடனே அச்சிறுவர்கள் கூச்சலிட்டதின் பேரில் அங்கு விவசாய வேலை செய்து கொண்டிருந்தவர்கள் மற்றும் உள்ளூர் இளைஞர்கள் ஓடி வந்து ஆற்றில் குதித்துக் காணாமல் போன சிறுவர்களைத் தேடினர். அப்போது அவர்கள் இருவரும் ஆற்றின் ஆழத்தில் சேற்றில் சிக்கி மூச்சு இறந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களின் உடல்களை தரைப்பகுதிக்குக் கொண்டு வந்து அவரது பெற்றோர்கள் மற்றும் வில்லியனூர் காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. பிறகு வரைந்து வந்த வில்லியனூர் போலிஸார், ஆம்புலன்ஸ் மூலம் இறந்த 2 சிறுவர்களின் உடல்களையும் உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

விடுமுறையைக் கழிக்க நண்பர்களுடன் ஆற்றுக்குச் சென்று குளித்துக் கொண்டிருந்த மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Also Read: ’ஊரை விட்டு வெளியே போ’.. விவசாயி வீட்டை இடித்து அராஜகமாக நடந்து கொண்ட அ.தி.மு.க Ex MLA!