India

திருமணம் முடிந்து 6 மாதத்தில் ரயில் முன் பாய்ந்த காதல் மனைவி.. கணவரும் அதே முடிவெடுத்ததால் அதிர்ச்சி !

ஆந்திர மாநிலம் அனந்தபூர் பகுதியை அடுத்துள்ளது தாடிபத்ரி என்ற இடம். இங்கு மஞ்சுநாத் (26) என்ற இளைஞர், புட்லூர் மண்டலம் கருச்சிந்தலப்பள்ளி கிராமத்தில் வசித்து வரும் ரமா தேவி (24) என்ற இளம்பெண்ணை நீண்ட வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இவர்கள் காதல் விவகாரம் மஞ்சுநாத் வீட்டுக்கு தெரியவரவே, அவர்கள் ஆரம்பத்தில் இதற்கு சம்மதிக்கவில்லை.

இருப்பினும் இருவரும் தங்கள் காதலில் பிடிவாதமாக இருந்த நிலையில், பெண் மற்றும் மாப்பிள்ளை வீட்டார் இவர்கள் காதலுக்கு சம்மதம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து இவர்களுக்கு இருவீட்டார் சம்மத்துடன் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதன்படி இருவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்த கையோடு ரமாதேவி, தனது கணவர் மஞ்சுநாத் வீட்டுக்கு சென்று வாழ்ந்து வந்துள்ளார். 6 மாதங்கள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்த சூழலில் கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி மனைவி ரமா தேவி திடீரென அதிகாலை சுமார் 3 மணியளவில் மஞ்சுநாத் வீட்டில் இருந்து வெளியேறி ஓடும் இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

இதையடுத்து தங்கள் மகள் தற்கொலைக்கு காரணம் மஞ்சுநாத் மற்றும் அவரது குடும்பத்தினர் என்றும், வரதட்சணை கொடுமையால் தான் தங்கள் மகள் தற்கொலை செய்துகொண்டதாகவும், ரமா தேவியின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இதுகுறித்து தங்கள் விசாரணையை தொடங்கினர்.

இந்த நிலையில், மனைவி ரமா தேவி தற்கொலையை தாங்கமுடியாத கணவர் மஞ்சுநாத், அவர் இறந்த மறுநாளே அதேபோல் ஓடும் இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மஞ்சுநாத் தற்கொலை குறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணமாகி 6 மாதத்தில் காதல் மனைவி இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டே மறுநாளே, கணவனும் அதேபோல் ஓடும் இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கழக நிகழ்வுகள் மற்றும் இன்றைய முக்கிய செய்திகள் என அனைத்து செய்திகளை உடனுக்கு உடன் அறிய கலைஞர் செய்திகள் இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்!

Also Read: டெல்லி போலிஸ் கன்னத்தில் பளார்.. பட்டப்பகலில் பெண் செய்த காரியத்தால் கதிகலங்கி போன அதிகாரிகள்.. | VIDEO