India

மருத்துவமனையில் ஊசிபோடும் போது கடும் வலி.. அலறித்துடித்த இளம்பெண்.. இறுதியில் காத்திருந்த பேரதிர்ச்சி !

கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியை சேர்ந்த அருணன் என்பவருக்கும் சினேகா என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து கர்ப்பமான சினேகாவுக்கு சில மாதங்களுக்கு முன்னர் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

ஆனால், குழந்தைக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால் சினேகா தனது குழந்தையுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இரு நாட்களுக்கு முன்னர் சினேகா குழந்தையுடன் இருந்த மருத்துவமனைக்கு நர்ஸ் ஒருவர் வந்துள்ளார்.

வந்தவர் குழந்தையின் தாயிக்கு மருந்தை செலுத்தவேண்டும் என்று கூறி, தான் எடுத்துவந்திருந்த ஊசியால் சினேகாவுக்கு மருந்து செலுத்தியுள்ளார். ஆனால், அந்த மருந்து உள்ளே சென்றதும் சினேகாவுக்கு கடும் வலி ஏற்பட்டதால் ஊசி போடுவதை நிறுத்துமாறு கூறியுள்ளார்.

ஆனால், நர்ஸ் ஊசி போடுவதை நிறுத்தாததால் சினேகா கூச்சல் போட்ட நிலையில், அந்த நர்ஸ் தப்பியோட முயன்றுள்ளார். அப்போது அங்கு இருந்தவர்கள் அந்த நர்ஸை பிடித்து விசாரித்ததில் அவர் அந்த மருத்துவமனையில் வேலை செய்பவர் இல்லை என்பது தெரியவந்தது.

மேலும், சினேகாவுக்கு அவர் விஷஊசியை செலுத்தியதும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து போலீசாருக்கு இது குறித்து தகவல் அளிக்கப்பட்ட நிலையில், அவர்கள் நடத்திய விசாரணையில் அந்த பெண்ணின் பெயர் அனுஷா என்பதும், அவர் சினேகாவின் கணவரின் காதலி என்பதும் தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலிஸார் அவரிடம் சினேகாவுக்கு விசஊசி செலுத்தியதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் விஷ ஊசி போட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்ட சினேகாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Also Read: இந்தி தேசிய மொழி.. விபத்து வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதியின் கருத்தால் அதிர்ச்சி.. வலுக்கும் கண்டனம் !