India

பாம்பு கடித்து உயிரிழந்த சிறுமி.. மருத்துவமனை முன் கொந்தளித்த உறவினர்கள்.. பின்னணி என்ன ?

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் அமைந்துள்ளது ஜிதே என்ற கிராமம். இங்கு சாரா என்ற 12 வயது சிறுமி ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த சூழலில் சம்பவத்தன்று சிறுமியை அதிகாலை நேரத்தில் சுமார் 1 மணியளவில் விஷப்பாம்பு ஒன்று கடித்துள்ளது. இதனால் அலறித்துடித்த சிறுமியை மீட்ட குடும்பத்தார் அருகில் இருக்கும் அரசு ஆரம்ப சுகாதார மையத்துக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கே உள்ள மருத்துவர் தனது மொபைல் அணைத்து வைத்திருந்தார். இதனால் வேறு வழியின்றி சிறுமியை வேறொரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கே உள்ள மருத்துமனையில் இதற்கான சிகிச்சை வசதி இல்லை என்று கூறப்படுகிறது. எனவே வேறொரு தனியார் மருத்துவமனைக்கு சிறுமி கொண்டு செல்லப்பட்டார்.

அங்கேயும் கூட மருத்துவர் சரிவர கவனிக்கவில்லை என்று, மீண்டும் பென் என்ற இடத்தில் அமைந்திருக்கும் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார். அந்த மருத்துவமனையில் மருத்துவர் புதிதாக வேலையில் சேர்ந்துள்ளதால் அவருக்கும் இது போன்ற பிரச்னைகளுக்கு எவ்வாறு சிகிச்சை அளிப்பது என்று தெரியாமல் திணறியதாக கூறப்படுகிறது.

இதனால் வேறொரு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளும்போதே சிறுமி பரிதாபமாக காலை 9 மணியளவில் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து சிறுமியின் மரணத்துக்கு மருத்துவமனை நிர்வாகங்கள் தான் காரணம் என மருத்துவமனை முன் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே சிறுமியின் மரணம் குறித்து குற்றச்சாட்டுக்கு, தங்கள் மீது தவறு இல்லை என்றும், சிறுமிக்கு 12 ஊசி செலுத்தப்பட்டு பலனளிக்கவில்லை என்றும், சிறுமி தாமதமாக அழைத்து வரப்பட்டது தான் அவரது உயிரிழப்புக்கு காரணம் என்றும் மருத்துவமனை நிர்வாகம் பதில் அளித்தது. தொடர்ந்து உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. 35 வயது வாலிபரை அடித்துக் கொன்ற தந்தை : ஒடிசாவில் பகீர்!