India

ஒன்றிய அமைச்சருக்கு வந்த வீடியோ கால்.. Sextortion மூலம் மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்.. நடந்தது என்ன ?

ஒன்றிய ஜல் சக்தி மற்றும் உணவு பதப்படுத்துதல் தொழில்துறை இணை அமைச்சராக இருந்து வருபவர் தான் பிரஹலாத் சிங் படேல் (Prahlad Singh Patel). இவருக்கு ஆபாச மிரட்டல் வீடியோ கால் ஒன்று வந்துள்ளதாக அண்மையில் போலீசில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் தற்போது 2 பேரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அண்மைக்காலமாக Honey Trap, Sextortion உள்ளிட்ட சில செயல்கள் குறித்து செய்திகள் வெளிவந்த வண்ணமாக இருக்கிறது. இதில் Sextortion என்பது பாலியல் ரீதியான விஷயங்களை வைத்து மிரட்டி பணம் பறிப்பது போன்ற குற்றங்களை உள்ளடக்கியவை ஆகும். ஆரம்பத்தில் இருந்தே இது பணம் வைத்திருப்பவர்களை குறி வைத்து நடக்கும் ஒரு மோசடி செயலாகும்.

தற்போது பதவிகளில், பொறுப்புகளில் இருப்பவர்களை குறிவைத்து நடக்கிறது. இவர்களுக்கு சமூகத்தில் தங்களுக்கு இருக்கக்கூடிய மதிப்பு குறையக் கூடாது என்பதால் மிரட்டலுக்கு பயப்படுகின்றனர். அந்த வகையில் ஒன்றிய அமைச்சர் பிரஹலாத் தற்போது இந்த சர்ச்சையில் சிக்க பார்த்தார். அதாவது கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர் தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.

அப்போது இவருக்கு தெரியாத மொபைல் எண்ணில் இருந்து வாட்சப் வீடியோ கால் ஒன்று வந்துள்ளது. அவரும் அதனை எடுத்து பார்க்கையில், எதிர் இருந்த நபர் ஆபாச வீடியோவை காட்டவே, பிரஹலாத் சில நொடிகளில் அழைப்பை துண்டித்துள்ளார். பின்னர் மீண்டும் அதே எண்ணில் இருந்து வந்த அழைப்பை எடுத்து பேசியபோது, அந்த வீடியோ க்ளிப்பை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக கூறி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

இதனால் பிரஹலாத் இதுகுறித்து போலீசில் புகார் அளிக்க முடிவு செய்தபிறகு, அவரது செயலாளர் அலோக் மோகன் டெல்லி சைபர் கிரைம் போலீசை தொடர்பு கொண்டு புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பிரஹலாத்தின் மொபைல் எண்ணுக்கு வீடியோ கால் செய்த எண்ணின் லொகேஷனை வைத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். அதன்படி மாநிலம் பரத்பூரை சேர்ந்த முகமது வகீல் மற்றும் முகமது சாகிப் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தொடர்ந்து இந்த சம்பவத்தில் தலைமறைவாக இருக்கும் சபீர் என்ற மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர். அவர்களிடம் விசாரிக்கையில் வசதி படைத்தவர்களை குறிவைத்து இதுபோல் Sextortion முறையில் மிரட்டி பணம் பறித்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Also Read: மணிப்பூர் விவகாரம்.. நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அனுமதி: பிரதமர் மோடிக்கு செக் வைத்த இந்தியா கூட்டணி!