India

மணிப்பூரில் தொடரும் வன்முறை.. கலவரத்துக்கு இடையே இணையதள சேவைக்கு உயர்நீதிமன்றம் அனுமதி !

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் ஏராளமான பழங்குடி சமூக மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு நாகா, குக்கி, மைத்தேயி சமூக மக்கள் எண்ணிக்கையில் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இதில் மைத்தேயி சமூக மக்கள் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால், அவர்களின் இந்த கோரிக்கையை மற்றொரு முக்கிய சமூகமான குக்கி சமூக மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் இந்த இருதரப்புக்கும் இடையே மோதல் போக்கு எழுந்துவந்து.இதையடுத்து கடந்த மாதம் சராசந்தூர் மாவட்டத்தில் மணிப்பூர் பழங்குடி இன மாணவர் சங்கம் சார்பாகப் பழங்குடியின மக்கள் ஒற்றுமை பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியில் வன்முறை வெடித்தது. பின்னர் இந்த வன்முறை மாநில முழுவதும் பரவியுள்ளது.கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேலாக வன்முறை வெடித்து வருகிறது. இந்த வன்முறையில் 130-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்தாமல் அமைதி காத்து வரும் ஒன்றிய அரசைக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட அங்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், பள்ளி சென்ற சிறுமி ஒருவர் பள்ளி வளாகத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டார். மேலும், கலவரம் தொடங்கிய நாள் முதல் தற்போது வரை அங்கு இணையதளம் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அம்மாநில உயர்நீதிமன்றத்தில் குறிப்பிட்ட இடங்களில் இணையதள சேவையை வழங்க உத்தரவிடுமாறு வழக்கு தொடரப்பட்டிருந்தது.

அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் , அங்கே ஃபைபர் ஆப்டிக் இணைப்புகள் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் இணையச் சேவையை வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், வீடுகளுக்கான குறிப்பிட்ட அளவு இணையச் சேவையையும் வழங்குவது குறித்தும் நடவடிக்கை எடுக்குமாறும் மாநிலத்தில் படிப்படியாக இணையச் சேவை வழங்குவது குறித்தும் பரிந்துரைக்குமாறும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Also Read: ஆளுநர் RN ரவி அந்தப் பதவிக்கு தகுதியற்றவர்.. - குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் !