India

வந்தே பாரத் ரயிலில் முன்பதிவு செய்தவருக்கு வேறு ரயிலில் இருக்கை.. பிரதமரிடம் புகார்.. சர்ச்சையில் IRCTC !

இந்தியாவில் ரயில் சேவையை மேம்படுத்தும் வகையிலும் 75 நகரங்களை இணைக்கும் படி வந்தே பாரத் விரைவு ரயில் திட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்தது. அதன்படி இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட டெல்லி - வாரணாசி இடையே இயங்கும் முதல் வந்தே பாரத் ரயிலின் தொடக்க ஓட்டத்தை கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் மோடி கொடியசைத்துத் துவக்கி வைத்தார். அப்போதே அந்த ரயில் விபத்துக்குள்ளானது.

மேலும், 3-வது வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி கடந்த ஆண்டு அக்டோபர் 30ம் தேதி தொடங்கி வைத்தார். மும்பையில் இருந்து குஜராத் காந்திநகர் இடையே இயக்கப்படும் இந்த ரயிலானது அதிவேகத்தில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென நான்கு எருமை மாடுகள் மீது மோதி வந்தே பாரத் ரயில் விபத்துக்கு உள்ளானது.

அதனைத் தொடர்ந்து பசுமாடு அதன்படி கன்றுக்குட்டி மோதல் என வந்தே பாரத் ரயில் அடுத்தடுத்து சேதமடைந்தது. அதன்பின்னர் மும்பை-ஷீரடி வந்தே பாரத் ரயிலில் தானியங்கி கதவை திறக்காமல் பயணிகள் அவதியடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சமீபத்தில் கூட, மோடி கேரளத்தில் தொடங்கி வைத்த முதல் வந்தே பாரத் ரயில் தனது முதல் பயணத்தை நிறைவு செய்த பிறகு ரயில் கண்ணூர் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அப்போது திடிரென பெய்த மழையில் வந்தே பாரத் ரயிலின் உள் மழை நீர் ஒழுகியது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், வந்தே பாரத் ரயிலால் மீண்டும் ஒரு சர்ச்சை ஏற்பட்டுள்ளது. சித்தார்த் பாண்டே என்ற பயணி டெல்லியில் இருந்து ஸ்ரீமாதா தேவி வைஷ்னவ் கோவிலுக்கு வந்தே பாரத் ரயிலில் முன்பதிவு செய்துள்ளார். ஆனால், அவருக்கு வந்தே பாரத் ரயிலில் இருக்கை ஒதுக்கப்படாமல் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் அவருக்கு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனால் வேறு வழியின்றி தேஜஸ் ரயிலில் பயணம் செய்துள்ளார். ஆனால், அந்த ரயிலின் கழிவறைகள் முகமும் மோசமான நிலையில் இருந்ததோடு ரயில் பெட்டியும் சுத்தம் செய்யப்படாமல் மாசடைந்த நிலையில் இருந்துள்ளது. இதனால் கடும் அதிருப்தி அடைந்த அவர் இது குறித்து ரயில்வே அமைச்சர், பிரதமர் அலுவலகம், ஐஆர்சிடிசி ஆகிய ஐடிக்களை டுவிட்டரில் டேக் செய்து, வந்தேபாரத் ரயிலுக்கு டிக்கெட் கட்டணத்தை வாங்கிக் கொண்டு, தேஜஸ் ரயலில் சீட் ஒதுக்கியது சரியா என கேள்வி எழுப்பியுள்ளார். அதனைத் தொடர்ந்து இதற்கு பதில் அளித்துள்ள ரயில்சேவா நிறுவனம், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.