India

ஓடும் ரயிலில் பாலியல் அத்துமீறல்.. தேர்வு எழுத சென்றபோது நேர்ந்த சோகம்: 8மணி நேரத்தில் கைது செய்த போலிஸ்!

மும்பையை 20 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வரும் இவர், தினமும் தனது கல்லூரிக்கு இரயிலில் செல்வது வழக்கம். பாதுகாப்பு கருதி இந்த இளம்பெண், தினமும் பெண்கள் பெட்டியில் செல்வது. வழக்கம். அந்த வகையில் சம்பவத்தன்று மாணவி, தனது கல்லூரிக்கு தேர்வு எழுத இரயிலில் பயணித்துள்ளார்.

அப்போது வழக்கம்போல் காலை 6 மணிக்கு சி.எஸ்.எம்.டி ரயில் நிலையத்திலிருந்து பேலாப்பூர் நோக்கி செல்லும் இரயிலின் பெண்கள் பெட்டியில் இளம்பெண் ஏறியுள்ளார். ஆனால் அந்த பெட்டியில் வேறு பெண்கள் யாரும் இல்லை. இந்த சூழலில் இரயில் புறப்படும் நேரத்தில் ஆண் நபர் ஒருவர் பெண்கள் பெட்டியில் ஏறினார். இதனை கண்ட அந்த பெண் பயந்துள்ளார்.

இவர் தனியாக இருப்பதை உணர்ந்த அந்த நபர், இந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனால் மிகவும் பயந்துபோன அவர், மஜித் பந்தர் ரயில் நிலையம் வந்த பிறகு அதிலிருந்து இறங்கி காமன் பெட்டியில் ஏறியுள்ளார். இந்த பெண் பதற்றத்தில் இருப்பதை அறிந்த அங்கிருந்தவர்களில் ஒருவர் விசாரிக்கையில், தனக்கு நேர்ந்ததை தெரிவித்துள்ளார்.

இதனை கண்டதும் அதிர்ச்சியடைந்த அவர், உடனே ரயில்வே போலீஸ் ஹெல்ப்லைனை தொடர்பு கொண்டு தகவல் கொடுத்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு பெண் காவலர்கள் வந்து அந்த பெண்ணை மீட்டு ஆசுவாசப்படுத்தினர். இதையடுத்து அவரை தேர்வு எழுத வேண்டிய இடத்துக்கு அழைத்து சென்று அங்கிருந்த அதிகாரியிடம் நடந்தவற்றை போலீசார் கூறினர்.

நிலைமையை உணர்ந்த தேர்வு அதிகாரியும் மாணவிக்கு வேறு ஒரு நாளில் தேர்வு நடத்தப்படும் என்று உறுதியளித்தார். இதையடுத்து அவரை சம்பவம் நடந்த இடத்திற்கு கூட்டி சென்று புகார் பெறப்பட்டது. தொடர்ந்து இளம்பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்டது யார் என்று அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி ஆய்வு செய்யப்பட்டது. அப்போது அந்த நபரின் முகம் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு படையினர், ரயில்வே போலீஸார் இணைந்து மூன்று தனிப்படைகளை அமைத்து குற்றவாளியை தேடி கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அந்த நபரின் பெயர் நவாஸ் கரீம் (40) என்றும், அவர் ரயில்வேயில் போர்ட்டராக வேலை செய்வதும், அவர் பீகாரை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.

இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இளம்பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்டவரை குற்றம் நடந்து 8 மணி நேரத்தில் போலீசார் கைது செய்துள்ளது பலர் மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து புறநகர் ரயிலில் பெண்கள் பெட்டியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Also Read: 100க்கும் அதிகமான பெண்கள்,ஆபாச படங்கள்: தமிழகத்தை உலுக்கிய நாகர்கோவில் காசி வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு