India

ஜாமினில் எடுத்த மனைவி மீது சந்தேகம்.. தெருவில் ஓட ஓட சுட்டு கொலை செய்த கொடூர கணவர் !

உத்தர பிரதேசம் மாநிலம் பரேலி பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணபால் லோதி (வயது 40). இவரும் அதே பகுதியை சேர்ந்த பூஜா என்ற பெண்ணும் கடந்த 2012-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு குழந்தைகள் இருக்கும் நிலையில் கடந்த ஆண்டு கிருஷ்ணாவை கொலை முயற்சி வழக்கில் போலீசார் கைது செய்தனர்.

இந்த சூழலில் பியூட்டி பார்லர் நடத்தி வந்த பூஜா, அங்கே இங்கே என பணத்தை புரட்டி, தனது கணவரை வெளியே கொண்டு வந்துள்ளார். அண்மையில் ஜாமீனில் வெளியே வந்த கணவரிடம், பூஜா சரிவர பேசாமல் இருந்துள்ளார். மேலும் பூஜாவின் நடவடிக்கைகளில் மாற்றங்களும் இருந்துள்ளது. இதனால் பூஜா மீது, கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

மேலும் கிருஷ்ணா குடித்து விட்டு வந்து மனைவி மற்றும் குழந்தைகளை அடித்து கொடுமை செய்து வந்துள்ளார். இதனால் பூஜா தனது கணவரை சரியாக கவனிக்காமல் இருந்துள்ளார். எனவே மேலும் ஆத்திரமடைந்த கிருஷ்ணா, அவரது மனைவியை தாக்கியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

அப்போது ஆத்திரத்தில் தான் வீட்டில் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை வைத்து மனைவி பூஜாவை கொலை செய்ய முயன்றுள்ளார். இதனால் பயந்துபோன பூஜா வெளியே தப்பித்து ஓடியுள்ளார். இருப்பினும் விடாமல் பின்தொடர்ந்த கணவர் அவரை சுட்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே பூஜா இரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

இதனிடையே இதனை தடுக்க வந்த பூஜாவின் தோழிக்கும் குண்டடி பட்டுள்ளது. அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து இதுகுறித்து போலீசாருக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள், ஆயுதத்துடன் கிருஷ்ணாவை கைது செய்தனர். மேலும் உயிரிழந்த பூஜாவின் உடலை உடற்கூறாய்வுக்கு அனுப்பினர்.

சிறைக்கு சென்ற தன்னை ஜாமீனில் எடுத்த மனைவி மீது சந்தேகமடைந்து கணவரே ஓட ஓட சுட்டு கொலை செய்துள்ள சம்பவம் உத்தர பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: காணாமல் போன மாற்றுத்திறனாளி சிறுவன்.. 500 மீ தூரத்தில் இரத்த கோரத்தில் சடலமாக கிடந்த சோகம் -நடந்தது என்ன?