India

ஒடிசா ரயில் விபத்து.. இறந்ததாக கருதி பிணவறையில் வைக்கப்பட்ட இளைஞர்.. 230 கிமீ பயணித்து மகனை மீட்ட தந்தை!

ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் ரயில் நிலையம் அருகே மூன்று நாட்களுக்கு முன்னர் இரவு 7.30 மணியளவில் ஹவுராவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில் மீது மோதியது. இதனால் ரயில் பெட்டிகள் தடம் புரண்டன.

அப்போது யஷ்வந்த்பூர்- ஹவுரா அதிவிரைவு ரயில் தடம்புரண்டு கிடந்த ரயில் வெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளாயின. அடுத்தடுத்து மூன்று ரயில்கள் ஒரே நேரத்தில் விபத்தைச் சந்தித்ததால் கோர விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்து நாட்டையை உலுக்கியுள்ளது. தற்போது வரை 280 பேர் உயிரிழந்துள்ளனர்; மேலும் 1500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

மீட்புப் பணிகள் நிறைவடைந்து ரயில் வழித்தடங்களை சீரமைக்கும் பணி தொடர்ந்து நடந்துவருகிறது. தேசிய பேரிடர் மீட்புக் குழு, ஒடிசா மாநில பேரிடர் மீட்புக் குழு, தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர், இந்திய விமானப்படை என பலதரப்பு வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்த சூழலில் இந்த கோர விபத்துக்கு காரணம் ஒன்றிய அரசின் அலட்சியம் என எதிர்க்கட்சிகள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த விபத்தில் இறந்துவிட்டதாக பிணவறையில் வைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் உயிரோடு வந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிஸ்வஜித் மாலிக் (வயது 24) என்பவர் கோரமண்டல் ரயிலில் பயணித்துள்ளார். இந்த ரயில் விபத்துக்குள்ளானதை அறிந்ததும் இவரின் தந்தை ஹேலாராம் மகனுக்கு போன் செய்துள்ளார்.

அப்போது தான் காயமடைந்து மோசமான நிலையில் இருப்பதை கூறியுள்ளார். தொடர்ந்து அவரின் தந்தை தனக்கு தெரிந்த ஆம்புலன்ஸை அழைத்துக்கொண்டு 230 கிமீ பயணித்து விபத்து நடந்த இடத்துக்கு வந்துள்ளார். தொடர்ந்து மருத்துவமனையில் தனது மகனை தேடியுள்ளார்.

ஆனால், மகனை காணாத நிலையில், மகன் இறந்திருப்பாரோ என தற்காலிகமாக அமைக்கப்பட்ட பிணவறைக்கு சென்றுள்ளார். அங்கு விசாரணை நடத்தியபோது அவரின் மகன் இருக்கும் இடத்துக்கு அவரை அழைத்து சென்றுள்ளனர். அப்போது பிணவறையில் அந்த நபர் கையை அசைப்பதாக ஒருவர் தகவல் தெரிவித்ததை அடுத்து அங்கு சென்ற மருத்துவரால் அந்த நபரை சோதனை நடத்தியபோது அவர் உயிரோடு இருப்பது தெரிவந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து அங்கு சென்று தனது மகன் உயிரோடு இருப்பதை அறிந்து தான் அழைத்துவந்த ஆம்புலன்சில் ஏற்றி கொல்கத்தாவுக்கே சென்று மகனுக்கு சிகிச்சை அளித்துள்ளார். இந்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து இதேபோல மேலும் பலர் இவ்வாறு இறந்து இருப்பார்களோ என அச்சம் ஏற்பட்டுள்ளது.

Also Read: ஓடும் பேருந்தில் ஆபாச சேட்டை.. சிறையில் இருந்து வெளியே வந்தவரை மாலை அணிவித்து வரவேற்ற ஆண்கள் சங்கம் !