India

என்னை விட தம்பியிடம் அதிக பாசம் காட்டுவதால் கொன்றேன்.. - மகளின் வாக்குமூலத்தால் அதிர்ந்த பெற்றோர் !

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சித் சர்மா என்பவருக்கு இரண்டு குழந்தைகள் இருந்துள்ளது. இதில் 15 வயதில் மூத்த பெண்ணும், 12 வயதில் ஒரு மகனும் இருந்துள்ளனர். இருவரும் தங்கள் பாட்டி வீட்டில் வசித்து வருகின்றனர். இதில் விடுமுறைக்காக இருவரும் தங்கள் பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளனர்.

அப்போது பெற்றோர் தன்னை விட தனது தம்பி மீது அதிக பாசம் காட்டி வந்துள்ளதாக அந்த 15 வயது மகளுக்கு அடிக்கடி எண்ணம் தோன்றியுள்ளது. இதன் காரணமாக அக்காவுக்கு தம்பி மேல் பெரிய அளவில் பொறாமை எழுந்துள்ளது. சம்பவத்தன்று அந்த சிறுவன் தனது பெற்றோரின் மொபைல் போனை எடுத்து விளையாடிக்கொண்டிருந்துள்ளார்.

அப்போது அவனின் அக்கா அங்கு வந்து தம்பியிடமிருந்து போனை தருமாறு கேட்டுள்ளார். ஆனால், இதற்கு அந்த சிறுவன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த அக்கா தம்பியின் கழுத்தை நெரித்துள்ளார். இதில் அவரின் தம்பி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதன் பின்னர் சிறிது நேரத்துக்கு பிறகு பெற்றோர் வீட்டுக்கு வந்து சிறுவனை தேடியுள்ளனர். அப்போது போர்வைக்கடியில் சிறுவன் கிடப்பதை அறிந்து அவரை எழுப்பச்சென்றபோது சடலமாக இருந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதன்பின் இது குறித்து அந்த சிறுமியின் கேட்டபோது என்னை விட தம்பி மேல் அதிக பாசம் காட்டியதால் அவனை கொலை செய்ததாக கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ந்த பெற்றோர் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பின்னர் அங்கு வந்த போலிஸார் சிறுமியை சிறுவர் சீர்திருத்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.