India

66 வயது தாயை கொடூரமாக கொன்ற ஜிம் மாஸ்டர்.. மகாராஷ்டிராவில் நடந்த கொடூரத்தில் பின்னணி என்ன ?

மகாராஷ்டிரா மாநிலம் தானே கோட்பந்தர் பகுதியில் வசித்து வந்தவர் விலாஸ் பட்கர் (71) - வினிதா பட்கர் (66). இவர்களுக்கு 2 பிள்ளைகள் இருக்கும் நிலையில், அதில் மூத்த மகன் சங்கல்ப் பட்கர் ஒரு ஜிம் பயிற்சியாளராக இருந்த வருகிறார். 32 வயதாகும் இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் தான் திருமணம் நடந்தது.

இதனிடையே ஜிம் பயிற்சியில் தீவிர நாட்டமுடைய இவர், 2019 ஆம் ஆண்டு மும்பை ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்றவர் ஆவார். ஜிம் பயிற்சியை தொடர்ந்து மேற்கொண்டு வந்த இவர், அதற்ககா ஸ்டெராய்டு ஊசியை எடுத்துக்கொண்டார். மேலும் போதை பொருட்களையும் எடுத்துக்கொண்டுள்ளார். இதனால் அவர் முழுமையாக போதைக்கு அடிமையாகி மன நலம் பாதிக்கப்பட்டவராக இருந்துள்ளார்.

திருமணம் செய்து வைத்தால் சரி ஆகிவிடும் என்று திருமணம் செய்து வைத்தால், தனது மனைவியுடனும் பெரிதாக பேசாமல் தனியாகவே இருந்து வந்துள்ளார். எனவே குடும்பத்துக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. தாயும், தந்தையும் தங்கள் மகனை கண்டித்துள்ளனர். இதனால் அவர் அடிக்கடி வீட்டை விட்டு வெளியே சென்று வந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று பெற்றோருக்கும், மகனுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரப்பட்ட மகன், தனது 66 வயது தாயை சரமாரியாக தாக்கி கொன்றுள்ளார். இதில் இரத்த வெள்ளத்தில் சரிந்த தாயை அப்படியே போட்டு விட்டு, தந்தையையும் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த தந்தை மயக்க நிலையில் இருந்துள்ளார்.

தொடர்ந்து தான் வைத்திருந்த கத்தியை எடுத்து கொண்டு தனது சகோதரியை கொல்ல அவரது இருப்பிடத்திற்கு சென்றுள்ளார். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனிடையே இந்த கொலை சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து தப்பி சென்ற சங்கல்ப்பின் இரு சக்கர வாகனத்தின் எண்ணை வைத்து அவர் எங்கே இருக்கிறார் என்பதை ஆய்வு மேற்கொண்டு வந்தனர். அப்போது அவர் குரலா நேரு நகரில் இருக்கும் தனது மாமா -அத்தை வீட்டுக்கு சென்று கதவை தட்டியுள்ளார். இந்த கொலை விவகாரம் அறிந்த அவர்கள், கதவை திறக்காமல் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் விரைந்த அவர்கள் சங்கல்ப்பை சுற்றி வளைத்து கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவருக்கு மருத்துவ பரிசோதனையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியுள்ளது.

Also Read: “என் அம்மாவை கொன்ன மாதிரி அப்பாவையும் கொல்லுங்க..” - போலிஸ் மீது புகார் தெரிவித்த தெலங்கானா சிறுவன் !