India

விடுதியை விட்டு வெளியேறத்தடை.. மோடியின் ‘மன் கி பாத்’ உரையை கேட்க வராத மாணவர்களுக்கு தண்டனை !

இந்திய பிரதமர் நரேந்திர மோடி 2014ம் ஆண்டிலிருந்து மாதம் தோறும் மன் கீ பாத் நிகழ்ச்சி மூலம் பேசி வருகிறார். இதில் அரசின் திட்டங்கள் குறித்தும், மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் உரையாடி வருகிறார். இந்த நிகழ்ச்சி நாடு முழுவதும் 34 தூர்தர்ஷன் சேனல்களிலும், 91 தனியார் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

பிரதமர் மோடி நாட்டில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து மக்களவையில் பேசாமல், எதிர்க்கட்சி தலைவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் பொதுக்கூட்டத்தில் பேசுவதுபோல் தனியாகப் பேசி வருகிறார் என ராகுல்காந்தி, மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதனிடையே கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி பிரதமர் மோடி வானொலியில் தனது 100 ஆவது மன் கி பாத் நிகழ்ச்சியில் உரை ஆற்றியிருந்தார். இதற்கான நாடு முழுவதும் பாஜக சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அப்போது டேராடூனில் உள்ள தனியார் பள்ளியில் பிரதமரின் உரையை கேட்க வராத மாணவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தற்போது சண்டிகர் மாநிலத்தில் பிரதமர் மோடியின் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியின் 100வது எபிசோட்-ஐ காணத் தவறிய 36 மாணவர்களுக்கு, ஒரு வாரம் விடுதியை விட்டு வெளியே செல்ல தடை விதித்து தேசிய செவிலியர் கல்வி நிறுவனம் உத்தரவிட்ட தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி பிரதமர் மோடிவானொலியில் தனது 100 ஆவது மன் கி பாத் நிகழ்ச்சியில் உரை ஆற்றியிருந்தார். இதற்கான நாடு முழுவதும் பாஜக சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அதன்படி ஏப்ரல் 30 ஆம் தேதி சண்டிகர் மாநிலத்தில் உள்ள கல்லூரியில் உள்ள செவிலியர் மன் கி பாத் உரையை கேட்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு மாணவர்கள் கண்டிப்பாக வரவேண்டும் என கூறப்பட்டிருந்தது .

ஆனால், ஏராளமான மாணவர்கள் இந்த நிகழ்ச்சியை காணவராமல் இருந்துள்ளனர். அதன் காரணமாக 36 மாணவர்களுக்கு, ஒரு வாரம் விடுதியை விட்டு வெளியே செல்ல தடை விதித்து தேசிய செவிலியர் கல்வி நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: பத்திரிகையாளர் நலன் சார்ந்த அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு !