India

40% பாஜக ஊழல் அரசு - மக்களே விழித்து கொள்ளுங்கள் : ஒப்பந்ததாரர்கள் சங்கம் கடிதம்- கர்நாடகாவில் அதிர்வலை!

கர்நாடக மாநிலத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் முடிவு மே 13ம் தேதி வெளியாகிறது. இந்த தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பு இருந்தே காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க கட்சியினர் பிரச்சாரத்தில் ஈடுபடத் துவங்கினர்.

இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என கருத்துக் கணிப்புகள் கூறியதால் பா.ஜ.கவினர் பீதியடைந்தனர். மேலும் மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் பா.ஜ.கவினர் பலர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தனர். இதனால் பிரதமர் நரேந்திர மோடி ஏழு நாட்கள் கர்நாடகாவில் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தார். அதேபோல் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா என பலரும் வாக்கு சேகரித்தனர்.

இருப்பினும் பா.ஜ.க ஆட்சி மீது மக்கள் கடும் கோவத்தில் இருக்கின்றனர். இதற்குக் காரணம் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில் எல்லாத்துறையிலும் ஊழல் நடந்துள்ளது. மேலும் பிரச்சாரத்தின் போது ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி பா.ஜ.க ஆட்சியின் 40% ஊழல் ஆட்சி என்பதைதான் முக்கிய ஆயுதமாக எடுத்தனர்.

மேலும் இந்த தேர்தலில் பா.ஜ.கவின் நடவடிக்கை நடிகர் பிரகாஷ் ராஜ் கடுமையாக விமர்சித்தார். குறிப்பாகப் பிரதமர் மோடியின் பிரச்சாரத்தை வெட்கம்.. எப்போதும் பொய்களுக்கான மேடை அமைக்கப்படுகிறது" என சாடியிருந்தார். இப்படி பலரும் பா.ஜ.கவை விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் கர்நாடகாவின் சட்டமன்ற தேர்தல் நாளை நடக்கவிருக்கும் வேலையில் பா.ஜ.கவுக்கு எதிராக #ByeByeBJPஎன்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி பலரும் ’40% கமிஷன் அரசாங்கத்துக்கு ஓட்டு இல்லை’ என்ற பதாகை ஏந்தி பா.ஜ.கவுக்கு எதிராக இணையத்தில் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பா.ஜ.க அரசு செய்த 40 % ஊழல் குறித்து பிரதமர் எங்களுக்குப் பதில் அளிக்கவில்லை. வாக்காளர்களே விழித்துக் கொள்ளுங்கள் என கர்நாடக ஒப்பந்ததாரர்கள் சங்கம் வாக்காளர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த கடிதத்தில், பா.ஜ.க அரசு ஒவ்வொரு ஒப்பந்தத்தையும் வழங்க 40% கேட்பதாகக் குற்றச்சாட்டு வைத்துள்ளது. மேலும் இந்த ஊழலின் காரணமாகப் பல ஒப்பந்ததாரர்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். மாநிலம் முழுவதும் மோசமான உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்பட்டுள்ளது. என நாளை நடக்கும் வாக்குப் பதிவில் பொதுமக்கள் மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டுகோள். அப்போது தான் ஜனநாயகம் மலரும் என்றும் கடிதத்தில் தெரிவித்துள்ளனர். இந்த கடிதம் தற்போது கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: நாளை வாக்குப்பதிவு.. தோல்வி பயத்தில் பணப்பட்டுவாடா: பா.ஜ.க நிர்வாகியை துரத்தி பிடித்த மாவட்ட ஆட்சியர்!