India

நாளை வாக்குப்பதிவு.. தோல்வி பயத்தில் பணப்பட்டுவாடா: பா.ஜ.க நிர்வாகியை துரத்தி பிடித்த மாவட்ட ஆட்சியர்!

கர்நாடக மாநிலத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் முடிவு மே 13ம் தேதி வெளியாகிறது. இந்த தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பு இருந்தே காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க கட்சியினர் பிரச்சாரத்தில் ஈடுபடத் துவங்கினர்.

இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என கருத்துக் கணிப்புகள் கூறியதால் பா.ஜ.கவினர் பீதியடைந்தனர். மேலும் மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் பா.ஜ.கவினர் பலர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தனர். இதனால் பிரதமர் நரேந்திர மோடி ஏழு நாட்கள் கர்நாடகாவில் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தார். அதேபோல் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா என பலரும் வாக்கு சேகரித்தனர்.

இந்நிலையில் தோல்வி பயம் காரணமாக நேற்று இரவு கல்புர்கி தெற்கு தொகுதியில் உள்ள சங்கமேஷ் காலணியில் பா.ஜ.க கட்சியைச் சேர்ந்த சிலர் இரண்டு வாகனத்தில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்துள்ளனர். இதுபற்றி மாவட்ட ஆட்சியர் யஸ்வந்த் குருகருக்கு தகவல் கிடைத்தது.

பின்னர் உடனே மாவட்ட ஆட்சியர் நேரடியாகச் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளார். அப்போது பா.ஜ.க-வினர் ஆட்சியரைப் பார்த்தும் தப்பிச் செல்ல முயன்றனர். ஆனால் ஆட்சியர் சினிமா பாணியில் துரத்திப் பிடித்தார். பின்னர் காரில் இருந்த இருவரை போலிஸார் கைது செய்துள்ளனர். இதேபோன்று பல இடங்கிளிலும் பா.ஜ.கவினர் பணப்பட்டுவாடா செய்து வருவதாக காங்கிரஸ் கட்சியினர் புகார் எழுப்பி வருகின்றனர்.

Also Read: கர்நாடகாவில் நாளை வாக்குப்பதிவு.. இன்றே இணையத்தில் ட்ரெண்டாகும் #ByeByeBJP!