India

இரண்டுமுறை திருமணம்.. இருமுறை விற்பனை.. ரயிலுக்காக காத்திருந்த சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. நடந்தது என்ன?

மத்தியப் பிரதேச மாநிலத்தில் 10-ம் வகுப்பு படித்து வரும் சிறுமி ஒருவர் 5 மாதத்துக்கு முன் விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா செல்ல கட்னி ரயில் நிலையத்துக்கு சென்றுள்ளார். அங்கு ரயில் வர காலதாமதம் ஆனதால் அங்கு காத்திருந்துள்ளார். இந்த பெண்ணை கண்ட அங்கிருந்த இளைஞர்கள் அவரிடம் பேச்சு கொடுத்துள்ளனர்.

மேலும், ரயில் நிலையத்தில் காத்திருப்பதை விட அருகில் இருக்கும் பூங்காவில் காத்திருக்கலாம் எனக் கூறி அந்த பூங்காவுக்கு அழைத்துச்சென்றுள்ளனர். அங்கு வைத்து மயக்க மருந்து கலக்கப்பட்ட குளிர்பானத்தை சிறுமிக்கு கொடுத்துள்ளனர். அதனை குடித்த சிறுமி மயக்கமடைந்துள்ளார்.

பின்னர் அவருக்கு நினைவு திரும்பியதும் உஜ்ஜயினியிலுள்ள ஒரு ஹோட்டல் அறையில் இரண்டு ஆண்கள், ஒரு பெண் ஆகியோர் தன்னை கடத்தியதை கண்டு அதிர்ந்துள்ளார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்த 27 வயது இளைஞர் ஒருவருக்கு அந்த சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்துள்ளது.

அதன்பின்னர்தான் அந்த கும்பல் இளைஞரிடம் அந்த சிறுமியை ரூ.2 லட்சத்துக்கு விற்றது தெரியவந்தது. இதனிடையே அந்த சிறுமியை திருமணம் செய்த இளைஞர் திடீரென தற்கொலை செய்துகொண்டுள்ளார். உடனே அந்த இளைஞரின் குடும்பம் அந்த சிறுமியை ரூ.3 லட்சத்துக்கு விற்பனை செய்துள்ளனர்.

தனது நிலை இந்த அளவு மோசமாக சென்றதை அறிந்த அந்த சிறுமி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். ஆனால், அவரை அங்கிருந்தவர்கள் மீட்டுள்ளனர். அதன்பின்னர் தான் இருந்த இடத்தில் இருந்து தப்பிய அந்த சிறுமி கோட்டா பதி ரயில் நிலையத்துக்கு வந்துள்ளார்.

அங்கு சிறுமியை கண்ட போலிஸார் அவரிடம் விசாரிக்கும்போதுதான் இந்த அதிர்ச்சி சம்பவம் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அந்த சிறுமியின் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததால் அவரை மருத்துவமனையில் அனுமதித்த போலிஸார் குழந்தைகள் நல ஆணையத்துக்கு தகவல் அளித்துள்ளனர். மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர் என்றும் கூறியுள்ளனர்.

Also Read: விமானத்தில் என்னிடம் ஆபாசமாக நடந்துகொண்டார் - டிரம்ப் மீது 81 வயது பாட்டி குற்றச்சாட்டு.. பின்னணி என்ன ?