India

கொட்டும் மழையிலும் கொண்டு வரப்பட்ட இதயம்.. சரியான நேரத்தில் செய்த அறுவை சிகிச்சையால் உயிர் பிழைத்த சிறுமி

ஆந்திராவில் அமைந்துள்ள திருப்பதி தேவஸ்தானத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் இதயம் தொடர்பான பிரச்சினைகளை சரி செய்ய 'பத்மாவதி குழந்தைகள் இதய நல மருத்துவமனை கடந்த ஆறு மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. இந்த மருத்துவமனையில் குழந்தைகளுக்கு குறைந்த செலவில் இதயம் சார்ந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த மருத்துவமனையில் இதுவரை 2 குழந்தைகளுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை மூன்றாவதாக ஒரு குழந்தைக்கு இதய இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆந்திராவில் உள்ள சிறுமி ஒருவர் இதய நோயால் பாதிக்கப்பட்டுளளார். இவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியதை தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளாக சிறுமி காத்திருந்தார். இந்த சூழலில் ஆந்திராவில் உள்ள ஸ்ரீ குளம் என்ற பகுதியில் உள்ள மாணவன் ஒருவர் அண்மையில் விபத்து ஒன்றில் சிக்கி தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்ததால் அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. அப்போது அவரது இதயம் இந்த சிறுமிக்கு பொறுத்த திட்டமிடப்பட்டது. அதன்படி அந்த மாணவரின் இதயம் விசாகப்பட்டினத்திற்கு கொண்டுவரப்பட்டு, விசாகப்பட்டின விமான நிலையத்திலிருந்து ஏர் ஆம்புலன்ஸ் மூலம் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.

பின் ரேணிகுண்டா விமான நிலையத்திலிருந்து கிரீன் சேனல் மூலம் தேவஸ்தான மருத்துவமனைக்கு இதயம் கொண்டுசெல்லப்பட்டது. இரவு நேரத்தில் மருத்துவ பணியாளர்கள் கொட்டும் மழையிலும் ஓடி சென்று இதயத்தை மருத்துவமனையில் சரியான நேரத்தில் கொண்டு சேர்த்தனர். தொடர்ந்து இதயம் வந்த பிறகு அந்த சிறுமிக்கு அறுவை சிகிச்சை மூலம் இந்த மாணவரின் இதயம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.

தற்போது சிறுமி நலமுடன் இருக்கிறார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொட்டும் மழையிலும் இதயத்தை சரியான நேரத்திற்கு கொண்டு வந்த மருத்துவமனை ஊழியர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்ததோடு சிறுமிக்கு இதயம் கொடுத்து உதவிய மாணவரின் குடும்பத்துக்கும் சிறுமியின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ஜூஸில் மயக்க மருந்து கலந்து பாலியல் வன்கொடுமை.. மும்பையில் வீடு தேடிய கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம் !