India

ஆபாச புகைப்படம்.. பாலியல் வன்கொடுமை.. வழிப்பறி.. டிக்டாக் பிரபலம் ‘மீசைக்கார வினீத்’ அதிரடி கைது !

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகேயுள்ள கிளிமானூர் பகுதியை சேர்ந்தவர் வினீத் (வயது 26). இவர் டிக்டாக் மூலம் மிகவும் பிரபலமானார். இதனால் இவருக்கு ஏராளமான பெண்கள் ரசிகர்களாக உள்ளனர். டிக்டாக்கை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிடும் இவர், தற்போது வழிப்பறி கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவனந்தபுரம் அருகே இருக்கும் கணியாபுரத்தில் பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது. இந்த பங்கில் ஷா என்பவர் மேனேஜராக பணியாற்றி வருகிறார். இந்த சூழலில் கடந்த மார்ச் மாதம் 23-ம் தேதி பெட்ரோல் பங்கில் உள்ள பணத்தை எடுத்துக்கொண்டு வங்கியில் செலுத்துவதற்காக இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போது அவரது கைபையில் சுமார் 2.50 லட்சம் ரூபாய் பணம் இருந்துள்ளது. ஷா பணத்தை கொண்டு செல்வதை அறிந்த மர்ம கும்பல் 2 பேர், அவர் செல்லும் வழியில் மறித்து கடுமையாக தாக்கி அந்த பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இதையடுத்து இதுகுறித்து பணத்தை பறிகொடுத்த ஷா, மங்கலபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணையை மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர். அதில் அந்த இரண்டு பேரின் முகம் பதிவாகியிருந்தது.

இதையடுத்து போலீசார் அந்த இரண்டு பேரையும் கைது செய்தனர். அப்போதுதான் அது டிக் டாக் பிரபலம் வினீத் என்பவதும் அவரது நண்பர் ஜித்து (22) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் சிறையில் அடைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த ஆண்டு இந்த வினீத் வேறு ஒரு சர்ச்சியிலும் சிக்கினார். அதாவது கடந்த சில மாதங்களுக்கு முன்பு வினீத்துக்கு கொல்லம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமானார். இவர்களது இன்ஸ்டாகிராம் பழக்கம் நாளடைவில் மொபைல் எண் மூலம் ஆடியோ, வீடியோ கால் பேசுவதாக அதிகரித்தது. அந்த இளம்பெண், ஒவ்வொரு முறையும் வீடியோ கால் செய்யும்போது இவர் அவரை ஆபாசமாக படமெடுத்துள்ளார்.

இவை ஏதும் அறியாத அந்த இளம்பெண், வினீத் ஒருமுறை தனியாக அழைத்ததால் சென்றுள்ளார். அப்போது வினீத் அவரை ஒரு லாட்ஜுக்கு அழைத்து சென்று அந்த பெண்ணின் ஆபாச புகைப்படங்களை காட்டியுள்ளார். மேலும் தன்னுடன் உறவுகொள்ளவில்லை என்றால் இதை வெளியிடுவதாக மிரட்டி கட்டயப்படுத்தி பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளார்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவி காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், வினீத்தை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த மொபைல் போனையும் பறிமுதல் செய்து விசாரிக்கையில், இதே போல் பல பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இது மட்டுமின்றி இவர் மீது திருட்டு, வழிப்பறி உள்பட பல குற்ற வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “எங்க இருந்து டா வர்றீங்க..” ஆந்திர முதல்வர் ஸ்டிக்கரை கடித்ததால் ஆத்திரம்.. நாய் மீது பெண் பரபர புகார்!