India

“அப்பா.. எனக்கு நீச்சல் சொல்லிக்கொடு..” - ஆற்றில் நீச்சல் பயிற்சியின்போது தந்தை மகனுக்கு நேர்ந்த சோகம் !

கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை அடுத்துள்ளது கொட்டியூர். இதன் அருகே கேளகம் என்ற கிராமம் உள்ளது. இங்கு லிஜோ ஜோஸ் (33) என்பவர் வசித்து வருகிறார். தனியார் கோல்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஸ்டெபி என்ற பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமானது.

ஸ்டெபி UAE-யில் வேலை செய்து வருகிறார். தற்போது இந்த தம்பதிக்கு நெபின் ஜோசப் என்ற 6 வயது மகனும், ஷிவானி என்ற 4 வயது மகளும் உள்ளனர். இதில் மகன் நெபின் அந்த பகுதியிலுள்ள பள்ளி ஒன்றில் UKG பயின்று வருகிறார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று லிஜோ ஜோஸ் தனது பகுதியின் அருகே இருக்கும் பாவலி ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது 6 வயது மகனும் அவருடன் சென்றுள்ளார். அங்கே தனது மகனுக்கு நீச்சல் சொல்லிக்கொடுக்க முயன்றுள்ளார் தந்தை லிஜோ. அதன்படி அந்த தற்காலிக தடுப்பணை ஒன்று உள்ளது.

அந்த பகுதியில் வைத்து தனது மகனுக்கு நீச்சல் சொல்லி கொடுத்துக் கொண்டிருந்துள்ளார். அந்த சமயத்தில் சிறுவன் எதிர்பாராத விதமாக ஆற்றில் இருந்த சேற்றில் மகன் சிக்கியுள்ளார்.

உடனே அவனை காப்பாற்ற லிஜோ ஜோஸ் முயற்சித்தார். ஆனால் அந்த சேற்றில் தந்தையம் சிக்கவே அதில் இருந்து இருவரும் மீள முயன்றனர். இருப்பினும் அது தோல்வியில் முடிந்தது. இதனால் காப்பாற்றும்படி இருவரும் கத்தி கூச்சலிட்டுள்ளனர். அவர்கள் சத்தத்தை கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், இருவரையும் மீட்டனர். பின்னர் அவர்களை அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கே இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் அந்த சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தால் அவரது குடும்பம் பெரும் சோகத்தில் மூழ்கியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த ஆற்றுக்கு மக்கள் செல்ல கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

ஆற்றில் நீச்சல் பயிற்சி மேற்கொண்டபோது தந்தை மற்றும் 6 வயது மகன் ஆற்றில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் கேரளாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: வறுமையில் குடும்பம்.. Insta Trading விளம்பரங்களை நம்பி பணத்தை இழந்த மாணவி: விபரீத முடிவால் நேர்ந்த சோகம்!