India

ஓடும் ரயிலில் பயங்கரம்.. பயணிகளை தீ வைத்து எரித்த மர்ம நபர்.. குழந்தை உட்பட 3 பேர் பலி.. கேரளாவில் சோகம்!

கேரளா மாநிலம் ஆலப்புழா - கண்ணூர் விரைவு இரயில் வழக்கம்போல் நேற்றும் இயங்கியது. அப்போது அந்த இரயில் கோழிக்கோடு, எலத்தூர் இரயில் நிலையம் அருகே நேற்று இரவு சென்றுக்கொண்டிருந்தது. அந்த சமயத்தில் இரவு சுமார் 9.30 மணி அளவில் D1 கோச்சில் பயணம் மர்ம நபர் ஒருவர் தனது சக பயணிகள் மீது தான் பாட்டிலில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார்.

இதனால் பதறிப்போன பயணிகள் அலறியடிக்க, இதில் 2 வயது குழந்தை, பெண், ஆண் என மூன்று பேர் ஓடும் இரயிலில் இருந்து குதித்துள்ளனர். அதோடு இரயிலினுள் இருந்தவர்கள் கத்தி கூச்சலிட அதில் ஒரு பயணி அபாய சங்கிலியை இழுத்து இரயிலை நிறுத்தினார். அந்த நேரத்தில் அந்த மர்ம நபர் அங்கிருந்து தலைதெறிக்க தப்பியோடினார்.

இதையடுத்து இதுகுறித்து இரயில்வே போலிஸாருக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில், விரைந்து வந்து விசாரித்தனர். அதோடு ஓடும் இரயிலில் இருந்து குதித்த 3 பேரையும் தேடினர். சிறிது நேரத்துக்கு பிறகு அவர்கள் இரயில்வே தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டனர். உயிரிழந்தவர்கள் பெயர் சஹாரா (2), ரஹ்மத், சௌபிக் என்று தெரிய வந்தது.

மேலும் இந்த கொடூர தாக்குதலில் 8 பேர் தீக்காயம் அடைந்தனர். அவர்களையும் மீட்ட அதிகாரிகள் கோழிக்கோடு அரசு மருத்துமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்தின் எதிரொலியாக கோழிக்கோடு மாவட்ட ஆட்சியர், ADGP கோழிக்கோடு மேயர் உட்பட அதிகாரிகள் அங்கேயே முகாமிட்டு விசாரித்து வருகின்றனர். அந்த நபர் சைக்கோவா அல்லது யாரையாவது பழி வாங்க இப்படி செய்தாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தீ வைத்த நபர் தப்பி செல்லும் CCTV காட்சிகள் போலிசார் கைப்பற்றி மர்ம நபரை தேடி வருகின்றனர்.

இரவு நேரத்தில் ஓடும் இரயிலில் சக பயணிகளை தீ வைத்து எரித்த கொலை முயற்சி செய்த மர்ம நபரால் 2 வயது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: கலாஷேத்ரா பாலியல் விவகாரம்.. தலைமறைவாக இருந்த பேராசிரியரை அதிரடியாக கைது செய்த தனிப்படை போலிஸ் !