India

ஆதார் எண்ணை வைத்து குற்றச்செயல்.. பெண்ணை ஏமாற்றி 20 லட்சம் பணம் பறித்த கும்பல்.. ஹரியானாவில் அதிர்ச்சி !

ஹரியானாவை சேர்ந்த பெண்ணுக்கு கடந்த மார்ச் 3-ம் தேதியன்று கொரியர் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக ஒரு போன் கால் ஒன்று வந்துள்ளது. அதில் பேசியவர் உங்கள் பெயரில் வந்த சில பார்சல்களை சுங்கத்துறை பறிமுதல் செய்து சோதனை செய்ததாகவும், அதில் சட்டவிரோதமான பொருள் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

மேலும், இது தொடர்பாக பேச காவல்துறை அதிகாரிகள் காத்திருப்பதாகவும் அவர்களுக்கு போனை கனெக்ட் செய்வதாகவும் கூறியுள்ளார். அதன்படி அந்த நபர் வேறு ஒருவருக்கு போனை கனெக்ட் செய்த நிலையில், அதில் பேசிய இருவர் தங்களை துணை போலீஸ் கமிஷனர் பால்சிங் ராஜ்புத், மும்பை போலீஸின் சைபர் க்ரைம் துறையின் அஜய் பன்சல் என்று கூறி அறிமுகம் செய்துள்ளனர்.

மேலும், அந்தப்பெண்ணிடம் உங்க ஆதார் எண் வழியாக பல குற்றச்செயல்களுக்கான பணப்பரிவர்த்தனை நடந்துள்ளது என்றும் உங்கள் வங்கிக்கணக்கு மூலம் பல பண மோசடிகள் நடந்துள்ளது என்றும் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் தனக்கு மும்பையில் எந்த வங்கிக்கணக்கும் இல்லை என்று கூறியுள்ளார்.

ஆனால், அந்த பெண்ணை நம்பவைத்த அந்த இருவரும் இந்த வழக்கில் கைதானால் பல ஆண்டுகள் சிறையில் இருக்க நேரிடும் என்றும், இதில் இருந்து தப்பிக்க நீங்கள் பணம் கொடுத்தால் உங்களை காப்பாற்றுகிறோம் என்றும் கூறியுள்ளனர்.

இதனை அந்த பெண்ணும் நம்பி அவர்கள் கேட்ட ரூ. 5 லட்சத்தை அனுப்பியுள்ளார். பின்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில் ரூ. 20 லட்சத்து 37 ஆயிரம் வரை அவர்களுக்கு அனுப்பியுள்ளார். அதன் பின்னரே அவர்கள் மேல் சந்தேகம் வலுத்த நிலையில், இது குறித்து விசாரணை நடத்தியபோது அந்த கொரியர் கம்பெனியே போலியானது என தெரியவந்துள்ளது.

அதன் பின்னரே அவர் இது குறித்து காவல்நிலையத்துக்கு சென்று தான் ஏமாற்றப்பட்டது தொடர்பாக புகார் அளித்துள்ளார். அதன்படி வழக்கு பதிவு செய்த போலிஸார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: நீண்டு கொண்டே செல்லும் உக்ரைன் போர்.. ரஷ்யாவுக்கு ஆதரவாக களமிறங்குகிறதா சீனா? வெளியான திடீர் அறிக்கை !