India

100 KM வேகத்தில் வந்து IT நிறுவன CEO மீது சட்டென்று மோதிய சொகுசு கார்.. நடைபயிற்சிக்கு சென்றபோது சோகம் !

மகாராஷ்டிர மாநிலம் மும்பையிலுள்ள கிங் சர்க்கிள் பகுதியில் வசித்து வருபவர் ராஜலட்சுமி. அந்த பகுதியிலுள்ள ஐடி நிறுவனத்தில் CEO பதவியில் இருந்து வந்த இவருக்கு ஓட்டபந்தயத்தில் ஆர்வம் இருந்துள்ளது. உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள தினமும் இவர் நடைப்பயிற்சி செல்வது வழக்கம்.

அந்த வகையில் நேற்று காலை ராஜலட்சுமி, தனது கணவருடன் ஒர்லி கடற்கரைப்பகுதியில் நடைபயிற்சிக்காக சென்றுள்ளார். அப்போது ராஜலட்சுமியை விட்டுவிட்டு, அவரது கணவர் சிவாஜிபார்க் பகுதிக்கு வந்து நடைப்பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.

அந்த சமயத்தில் அந்த பகுதிக்கு சொகுசு கார் ஒன்று அதி வேகமாக வந்துள்ளது. இதனை கவனிக்காத ராஜலட்சுமி, கடற்கரையோரம் இருக்கும் சாலையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சுமார் 100 கி.மீ வேகத்தில் வந்த அந்த கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவில் இருந்த டிவைடரில் மோதியதில், அதற்கு மறுபக்கம் இருந்த ராஜலட்சிமியை இடித்தது.

இதில் நிலை தடுமாறி, டிவைடரில் ராஜலட்சுமி சட்டென்று விழுந்தார். இந்த விபத்தில் அவரது தலையில் பலமாக அடிபட்டது. மேலும் இதனை கண்ட கார் ஓட்டுநர், உடனே சம்பவ இடத்தில் இருந்து தப்பிக்க முயன்றார். ஆனால் அந்த பகுதி மக்கள் அவரை வளைத்து பிடித்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து ஆம்புலன்ஸ் மற்றும் காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

விரைந்து வந்த அவர்கள் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கே அவருக்கு சிகிச்சை கொடுக்கப்பட்ட நிலையில், அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது உயிரிழந்த பெண்ணின் பெயர் குறித்த விபரங்கள் தெரியவந்தது. மேலும் விபத்து ஏற்படுத்தியவர் பெயர் சுமர் மெர்ச்சண்ட் என்றும், அவர் முந்தைய நாள் பார்ட்டியில் இருந்து காரை வேகமாக ஓட்டி வந்ததும் தெரியவந்தது. மேலும் அவரது காரின் மீட்டரை சோதனை செய்தபோது 100 கி.மீ வேகத்தில் வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் கார் ஓட்டி வந்த சுமர் குடித்துவிட்டு வண்டியை ஓட்டி வந்தாரா என்று அவரது இரத்த மாதிரியை சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இவர் ஏற்கனவே வேகமாக கார் ஓட்டி வந்ததாக பலமுறை அபராதம் கட்டியுள்ளதும், இவர் மீது வழக்கு உள்ளதும் போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

தொடர்ந்து இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடைபயிற்சிக்கு சென்ற ஐடி பெண் ஊழியர் மீது 100 கி.மீ அதி வேகத்தில் வந்த சொகுசு கார் ஒன்று மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானது மும்பையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: பாட்னா இரயில் நிலையத்தில் ஒளிபரப்பான ஆபாச வீடியோ.. பதறியடித்து ஓடிய பயணிகள்.. என்ன நடந்தது ?