India

கர்ப்பமான சிறுமி.. பெற்றோர் உதவியுடன் உயிரோடு எரித்து கொன்ற கொடூர காதலன்.. பீகாரில் அதிர்ச்சி !

பீகார் மாநிலம் நவாடா பகுதியில் உள்ளது ராஜவல்லி என்ற கிராமம். இங்கு சோனு குமார் என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாற, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.

இவர்களது நெருக்கம் அதிகரிக்கவே, சிறுமியும், இளைஞரும் தனிமையில் ஒன்றாக இருந்துள்ளனர். இதன் விளைவாக சிறுமி கர்ப்பமுற்றுள்ளார். சிறுமி தான் கர்ப்பமாக இருந்ததை அறிந்ததும் மிகவும் பதறிபோயுள்ளார். இதையடுத்து தனது காதலன் சோனுவிடம் இதனை உடனடியாக தெரிவித்த சிறுமி, தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி கூறியுள்ளார்.

ஆனால் அதனை தவிர்த்துள்ளார் சோனு. இந்த விவகாரம் சோனுவின் பெற்றோருக்கு தெரியவரவே, அவர்கள் இவர்கள் திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் அந்த சிறுமியிடம் பேசுவதை மொத்தமாக விட்டுள்ளார். இருப்பினும் விடாத சிறுமி, தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தி வந்துள்ளார். சம்பவத்தன்று சிறுமி சோனுவை தனியாக சந்தித்துள்ளார். அப்போது தனது நிலைமையை எடுத்து கூறியுள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த சோனு, அவரை தாக்கியுள்ளார். மேலும் அங்கு மறைந்திருந்த சோனுவின் பெற்றோரும் சிறுமியை தாக்கியுள்ளனர். அதோடு தாங்கள் கொண்டு வந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றி உயிரோடு எரித்து கொலை செய்துள்ளனர். பிறகு அந்த சடலத்தை யாருக்கும் தெரியாமல் புதைத்துள்ளனர்.

இந்த கொலையை தொடர்ந்து சிறுமியின் பெற்றோரையும், சோனுவின் பெற்றோர் கடத்தி வைத்துக்கொண்டனர். கட்நத மார்ச் 13-ம் தேதி இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சுமார் 4 நாட்களுக்கு பிறகு சோனு மற்றும் அவரது குடும்பத்தாரிடம் இருந்து தப்பித்த சிறுமியின் தந்தை இதுகுறித்து அருகில் இருந்த காவல்துறையில் புகார் அளித்தார்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சோனு உட்பட அவரது குடும்பத்தார் 4 பேரை அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து சிறுமியின் இறப்பு குறித்து விசாரித்தும், அவரது சடலத்தை மீட்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

கர்ப்பமாகே 16 வயது சிறுமியை பெற்றோர் உதவியுடன் உயிரோடு எரித்து கொன்ற காதலனின் செயல் பீகாரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: சிறையில் ஆண் கைதிகளுடன் பாலியல் உறவு.. 18 பெண் காவலர்கள் செயலால் அதிர்ச்சி.. - பரபரத்த இங்கிலாந்து !