India

மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி 55 வயது முதியவர் அடித்து கொலை.. தொடரும் இந்துத்துவ கும்பல் அராஜகம்!

பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு நாட்டில் பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் இந்துத்துவ குண்டர்கள் பலர் பல்வேறு வன்முறை செயல்களிலும், கும்பல் தாக்குதல்களிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

அதற்கு எதிராகப் புகாரளித்தாலும் காவல்துறை மற்றும் அரசுத் தரப்பிலிருந்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் குற்றம் புரிபவர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே மேற்கொண்டு வருகிறது. இதனால் இந்துத்துவ கும்பலின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது.

இந்நிலையில் பீகாரில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி 55 வயது முதியவர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம், ஹசன்புர் கிராமத்தைச் சேர்ந்தவர் நசீம் குரேஷி. 55 வயது முதியவரான இவர் தனது உறவினர் பேரோஷ் குரேஷி என்பவருடன் சேர்ந்து ஜோகியா கிராமத்திற்குச் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது இவர்களை ஒரு கும்பல் வழிமறித்து. மேலும் நீங்கள் மாட்டிறைச்சி வைத்துள்ளீர்கள் என கூறி அந்த கும்பல் இவர்களுடன் வாக்குவாதம் செய்தது.

பின்னர் அந்த கும்பல் அங்கிருந்த உருட்டுக் கட்டையை எடுத்து முதியவர் மற்றும் அவரது உடன் வந்த உறவினரையும் கடுமையாகத் தாக்கியது. அப்போது பேரோஷ் குரேஷி அந்த கும்பலிடம் இருந்து தப்பித்து ஓடியுள்ளார்.

இதையடுத்து முதியவரைத் தாக்கிய அந்த கும்பல் அவரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் போலிஸார் ரத்தவெள்ளத்திலிருந்த முதியவரைச் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முதியவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து முதியவரைத் தாக்கிய சுஹில் சிங், ரவி ஷா, உஜ்வால் சர்மா ஆகிய மூன்று பேரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி முதியவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்திய முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே நடைபெறும் அக்னிபாத் தேர்வு”: ஒன்றிய அரசுக்கு வலுக்கும் கண்டனம்!