India

ஆந்திரா: 11 ஆண்டுகள் மனைவியை தனி அறையில் அடைத்து வைத்த கணவர்..பெற்றோரின் பேச்சை கேட்டு செய்த கொடுஞ்செயல்!

ஆந்திர மாநிலம் விஜயநகரத்தை சேர்ந்த வழக்கறிஞர் மதுசூதனன். இவருக்கும் ஸ்ரீ சத்யசாய் மாவட்டம் புட்டபர்த்தி என்ற பகுதியை சேர்ந்த சாய் சுப்ரியா என்பவருக்கும் கடந்த 2008-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர்.

நன்றாக சென்றுகொண்டிருந்த இவர்கள் வாழ்க்கையில் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்னர் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மனைவி சாய் சுப்ரியாவின் நடத்தை மேல் கணவரின் குடும்பத்துக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை வீட்டில் அடைத்துவைக்க மதுசூதனனை அவரின் பெற்றோர் வற்புறுத்தியுள்ளனர்.

அவர்களின் பேச்சை கேட்டு மனைவியை வீட்டுக்குள்ளேயே ஒரு இருட்டு அறையில் மதுசூதனன் அடைத்து வைத்துவந்துள்ளார். பெற்றோர் உட்பட யாரையும் சந்திக்க சாய் சுப்ரியாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மகளை காணாத சாய் சுப்ரியாவின் பெற்றோர் மதுசூதனனின் வீட்டுக்கு வந்தபோதும் அவரை வீட்டுக்குள் அனுமதிக்க மதுசூதனனின் குடும்பத்தினர் அனுமதிக்கவில்லை.

பலமுறை இவ்வாறு நடந்தநிலையில், ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த சாய் சுப்ரியாவின் பெற்றோர் இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்படி போலிஸார் மதுசூதனனின் வீட்டுக்கு வந்தபோதும் அவர்களை வீட்டுக்குள் உள்ளே மதுசூதனனின் குடும்பத்தினர் அனுமதிக்கவில்லை.

அதன்பின்னர், சாய் சுப்ரியாவின் பெற்றோர் ஆகியோர் நீதிமன்றத்தில் சர்ச் வாரண்ட் பெற்று போலிசாருடன் மதுசூதனனின் வீட்டுக்குள் நுழைந்து தனியறையில் 11 ஆண்டுகள் அடைந்துகிடைத்த சாய் சுப்ரியாவை மீட்டு நீதிமன்றத்துக்கு அழைத்துவந்துள்ளனர்.

மிகவும் மெலிந்த தேகத்துடன் காணப்பட்ட சாய் சுப்ரியாவை நீதிபதி மருத்துவமனையில் அனுமதிக்குமாறு உத்தரவிட்டார். மேலும், மதுசூதனனின் குடும்பத்தினரையும் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: இந்த மீச வச்ச.. இனிமேல் இப்படி பேசுனா எப்படி அடி விழும் என காட்டிய ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் !