India

திருமண தேதியை மறந்த கணவன்.. குடும்பத்துடன் சேர்ந்து கும்மாங்குத்து குத்திய மனைவி: போலிஸில் புகார்!

மும்பை அடுத்த பைகன்வாடி பகுதியைச் சேர்ந்தவர் விஷால் நாங்க்ரே. இவரது மனைவி கல்பனா. இந்த தம்பதிக்குக் கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி திருமணம் நடந்துள்ளது.

இந்நிலையில், இந்த தம்பதியின் திருமண நாள் கடந்த 18ம் தேதி வந்துள்ளது. அப்போது கணவன் ஆசையாகத் திருமண வாழ்த்து சொல்லி பரிசு கொடுப்பார் என மனைவி கல்பனா நினைத்துள்ளார். ஆனால் திருமண நாளை மறந்து விட்டு வழக்கம்போல் விஷால் நாங்க்ரே வேலைக்குச் சென்றுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கல்பனா கணவன் மீது சண்டையிட்டுள்ளார். பிறகு அடுத்தநாள் வேலை முடித்து விட்டு கல்பனா வந்தபோது வீட்டிற்கு வெளியே தனது வாகனத்தை விஷால் நாங்க்ரே கழுவிக் கொண்டிருந்துள்ளார்.

இது மேலும் கல்பனாவை ஆவேசப்பட வைத்துள்ளது. மீண்டும் கணவனுடன் சண்டைபோட்டுள்ளார். பிறகுத் தனது தாய், சகோதரர்களை வீட்டிற்கு வரவைத்து கணவன் என்றும் பாராமல் அனைவரும் குடும்பமாகச் சேர்ந்து அவரை தாக்கியுள்ளனர்.

இதோடு விடாமல் இரவு விஷால் நாங்க்ரேவின் தாயார் வீட்டிற்குச் சென்று அங்கேயும் சண்டைபோட்டுள்ளனர். அப்போது மாமியாரை கல்பனா கண்ணத்தில் அடித்துள்ளார். மேலும் விஷால் நாங்க்ரேவுடன் இனி ஒன்றாக இருக்க முடியாது எனவும் கூறியுள்ளார்.

இதையடுத்து விஷோல் நாங்க்ரே தனது மனைவி மற்றும் அவரது தாய், சகோதரர் ஆகியோர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் படி போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: அமெரிக்காவுக்கு போலி கொரோனா மருந்து அனுப்பி ரூ.6 கோடி மோசடி: போலிஸாரிடம் சென்னை தம்பதி சிக்கியது எப்படி?